மத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...!
சென்னை: செப்.20-ம் தேதி மத்திய அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அந்தக் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கூடிய உயர்நிலை செயல்திட்டக்குழுவில் ஆ.ராசா, கே.என்.நேரு, சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்ற மூத்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். அதில், இந்தி மொழி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட கருத்து குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தியை திணிக்கும் வகையில் அமித்ஷா கருத்து வெளியிட்டதாகவும், அதனால் மத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதிமாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியை திணிப்பதை கைவிட்டு நாட்டை முன்னேற்ற உருப்படியான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், ஒத்தக் கருத்துடைய கட்சிகளிடமும் இது குறித்து எடுத்துக்கூறி அழைப்பு விடுப்போம் எனவும் கூறினார்..
அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக நாட்டிலேயே முதல் போராட்டத்தை முன்னெடுக்கிறது திமுக.