ஸீன் பேச்சால் சிவப்பான ஸ்டாலின்.. அடிச்சு தூக்கி அதிரடி காட்டும் திமுக.. திண்டாடும் அதிமுக!
சென்னை: ச்சும்மா இருந்தவனை சொறிஞ்சுவிட்டால் இப்படித்தான் ஆகும்!...என்பார்களே அந்த பஞ்சாயத்துதான் இப்போது ஸ்டாலின் விஷயத்தில் நடந்திருக்கிறது. தன்னை சீண்டியதால் அவர் தாறுமாறாக சீறி, கிளம்பிவிட இப்போது திண்டாடிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.
எங்கே இந்த பஞ்சாயத்து? கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை மற்றும் வெள்ளம். கோடிக்கணக்கான மதிப்பில் பொருள் இழப்பு, ஈடு செய்ய முடியாத வகையில் உயிர் இழப்பு என்று பெரும் சேதாரங்கள் நிகழ்ந்திருக்கிறது. இந்த விவகாரம் தன் கவனத்துக்கு வந்ததுமே அங்கே கிளம்பினார் ஸ்டாலின்.
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து நிவாரணங்களை வழங்கினார். அரிசி, கம்பளி, உணவு, மருந்துகள் என்று பெரிய அளவில் பொருள் உதவியை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்தார். அதன் பின் இறந்த குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டது. அதோடு நில்லாமல், தி.மு.க.வின் ஐந்து எம்.பி.க்கள் மற்றும் ஒரு எம்.எல்.ஏ. ஆகியோர் சேர்ந்து பத்து கோடி நிதி தருவார்கள்! என்றார்.
ஸீன் போடுகிறார் ஸ்டாலின்
இத்தனையும் செய்துவிட்டு ஸ்டாலின் சென்னைக்கு திரும்புகையில், ‘ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நின்று ஸீன் போடுறார்' என்று முதல்வர் செம்ம விமர்சனம் ஒன்றை வைத்தார். சென்னையில் ஃபிளைட்டை விட்டு இறங்கி, வெளியே வந்த ஸ்டாலினிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, முதல்வரை சரமாரியாக விமர்சித்துவிட்டு கிளம்பிவிட்டார்.
கூவம் நதியை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்? உச்சநீதிமன்றம் விளக்கம்
ஆவேசமான ஸ்டாலின்
ஆனால் ஸ்டாலினை பற்றி முதல்வர் வைத்த ‘ஸீன்' எனும் விமர்சனம் பெரியளவில் வைரலானது. இதனால் கடுமையாக காயம்பட்டார் ஸ்டாலின். ‘பாதிக்கப்பட்ட இடங்கள்ள ஸ்டாலின் போய் நின்னு பண்றதெல்லாம் வெறும் ஸீன் தானா?' என்று விமர்சனங்கள் வெடித்தன. இதனால் டென்ஷனின் உச்சத்துக்கு போன ஸ்டாலின், உடனே சில உத்தரவுகளை தன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு பிறப்பித்தார்
குவியும் உதவிகள்
அதன்படி நீலகிரிக்கு, தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் இருந்து நிவாரண மற்றும் உதவிப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அரிசி, கோதுமை, ஆடைகள், பிஸ்கட்ஸ் என்று துவங்கி ஏகப்பட்ட விஷயங்கள் இப்படி அனுப்பப்படுகின்றன. இதை அப்படியே அலேக்காக வாங்கும் நீலகிரி மாவட்ட தி.மு.க. அதை அந்த மாவட்டம் முழுக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறது.
கூடவே பிரச்சாரம்
வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு மட்டுமில்லாமல் ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கும் வழங்குகிறார்கள். அப்போது "நீங்க இப்படி பரிதவிச்சு கிடக்கீங்க. தமிழக முதல்வர் உங்களைப் பார்க்க வராம இங்கிலாந்து, அமெரிக்கான்னு பறந்துட்டார். ஆனால், உங்களுக்காக கடும் வெள்ளத்திலும் ஓடி வந்து உதவியது ஸ்டாலின் தான். இப்பவும் உங்களுக்காக பல கோடி மதிப்புடைய பொருட்களை அனுப்பச் சொல்லி உத்தரவு போட்டிருக்கார். இப்படிப்பட்ட நபர் உங்களுக்கு முதல்வராக இருந்தால் உங்க வாழ்க்கை எப்படியிருக்கும்னு யோசியுங்க. அதனால அடுத்து வரும் தேர்தல்களில் உங்க வாக்குகளை எங்க கட்சிக்கே போட்டு நன்றி செலுத்துங்க." என்று ஓப்பனாக பிரசாரத்தை துவக்கிவிட்டனர்.
தர்மசங்கடத்தில் அதிமுக
இது நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வை அலறவிட்டுள்ளது. ஏற்கனவே அம்மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும் செல்வாக்கு இல்லையாம். இந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலினை பார்த்து சொன்ன ‘ஸீன்' எனும் ஒரு வார்த்தையால் ஸ்டாலின் கோவப்பட்டுக் கெளம்ப, அது இப்படி பிரசாரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. நொந்து கிடக்கின்றனர் நீலகிரி அ.தி.மு.க.வினர்.
எது எப்படியோ மக்களுக்கு நிவாரணம் கிடைச்சால் சரி!
- ஜி.தாமிரா