பல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்
Recommended Video
சென்னை: திமுகவுக்கு நாங்குநேரியிலும் சரி, விக்கிரவாண்டியிலும் சரி வெற்றிக்கான வாய்ப்புகள் தள்ளாட்டத்தில் உள்ளனவாம். வெற்றி பெற வேண்டுமானால் மிகக் கடுமையாக மெனக்கிட வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளதாம்.
நாங்குநேரியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டியில் திமுகவே களம் காண்கிறது. விக்கிரவாண்டியிலும் சரி, நாங்குநேரியிலும் சரி திமுக மற்றும் கூட்டணி வித்தியாசமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இவை அனைத்தும் வெற்றி வாய்ப்புக்கு பெரும் இடையூறாக வந்து நிற்கின்றனவாம். பணம் ஒரு பக்கம் ஜாதி வாக்குகள் ஒரு பக்கம் என இரு தொகுதிகளிலும் வித்தியாசமான பிரச்சினைகள் களத்தில் திமுகவை கலக்கி வருகின்றனவாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அகவிலைப்படி அதிரடியாக உயர்வு
காங்கிரஸ்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் பில்டர் ரூபி மனோகரன் களத்தில் இருக்கிறார். சீட் மட்டும் கொடுங்க போதும், செலவுகளை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று இவர் முன்பே கூறி விட்டதால் கட்சியிலிருந்து ஒரு பைசா கூட தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காசு இறங்கலையே
ரூபி மனோகரன் சீட் வாங்கி விட்டார் என்றாலும் கூட பெரிய அளவில் இன்னும் பணத்தை இறக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூத் கமிட்டிகளுக்குத்தான் முதல் கவனிப்பு இருக்கும். அங்குதான் சிறப்பாக கவனிக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் காங்கிரஸ் சொதப்பி வருவதாக சொல்கிறார்கள்.
திமுக அதிருப்தி
தற்போதைய தகவலின்படி பூத் கமிட்டிகளுக்கு சொற்ப தொகையே தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் பெரும் ஏமாற்றத்தில் கட்சிக்காரர்கள் உள்ளனராம். அதை விட முக்கியமாக திமுகதரப்பில் ஏகப்பட்ட அதிருப்திகள் வரிசை கட்டி நிற்கின்றன. இது காங்கிரஸுக்குப் பெரும் பாதகமாக முடியும் என்று சொல்கிறார்கள்.
ஏகப்பட்ட அதிருப்திகள்
திமுகவைப் பொறுத்தவரை நாங்குநேரியில் போட்டியிட பெரும் ஆர்வமாக காத்திருந்தது. ஆனால் தொகுதி கிடைக்காமல் போனதால் அப்செட் ஆகி விட்டனர். கடந்த பல வருடமாகவே நாங்குநேரி திமுக வசம் இல்லை. இதனால் மனதளவிலும் கூட இதை அவர்கள் தங்களது தொகுதியாக எண்ணவில்லை. ரூபியும் கூட பணத்தை இறக்காமல் உள்ளார். இப்படி பல அதிருப்தியில் திமுக உள்ளது. மேலும் ரூபி மனோகரனுக்கு இது சொந்த ஊர் இல்லை என்பதால் காங்கிரஸார் மத்தியிலும் கூட பெரிதாக ஆர்வம் இல்லையாம்.
கஷ்டம்தான்
மு.க.ஸ்டாலின் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதனால் திமுகவினர் சுறுசுறுப்பாகியுள்ளனர். ஆனால் ஸ்டாலின் போன பிறகு மீண்டும் தொய்வு வந்து விடும் என்கிறார்கள். காரணம், காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த விதமான புயல் வேகமும் இல்லை என்பதால். காசை இறக்காவிட்டால், திமுக சுறுசுறுப்பாக செயல்படாவிட்டால் நாங்குநேரியில் காங்கிரஸ் கரையேறுவது மிக மிக கடினம் என்பதே அங்குள்ள கள நிலவரம்.
அதிமுக தீவிரம்
மறுபக்கம் நாங்குநேரியில் அமைச்சர்கள் முகாமிட்டு அசத்திக் கொண்டுள்ளனர். பூத் கமிட்டிகள் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றனவாம். அமைச்சர்களைப் பொறுத்தரை நாங்குநேரியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேகத்தில் உள்ளனர். அதிமுகவினரும் கூட இதை கெளரவப் பிரச்சினையாக கருதி வேலை பார்க்கிறார்களாம்.
விக்கிரவாண்டி நிலவரம்
விக்கிரவாண்டியில் வேறு விதமான கள நிலவரம் திமுகவை கலவரமாக்கி வருகிறது. விக்கிரவாண்டி வன்னியர்கள் கோட்டை. இங்கு பாமகவும் சரி, அமைச்சர் சி.வி.சண்முகமும் சரி தீப்பொறி போல வேலை பார்க்கிறார்களாம். திமுக வேட்பாளரும் வன்னியர்தான் என்றாலும் கூட அவர் பொன்முடிக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார். பொன்முடி உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பாமக சுறுசுறுப்பு
பாமகவைப் பொறுத்தவரை விக்கிரவாண்டியில் அதிமுக ஜெயித்தேயாக வேண்டும். அப்போதுதான் பாமகவின் செல்வாக்கு சரியவில்லை என்பதையும் நிரூபிக்க முடியும். எனவே பாமக தொகுதியை தீவிரமாக வலம் வர ஆரம்பித்துள்ளது. என்னதான் திமுக வேட்பாளர் நமது சமூகதைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரால் பொன்முடியைத் தாண்டிய செயல்பட முடியாது. எனவே உடையாருக்கு கட்டுப்பட்ட வன்னியர் உங்களது பிரதிநிதியாக வேண்டுமா அல்லது முழுக்க முழுக்க நமது சமூகத்திற்காக பாடுபடத் தயாராக இருக்கும் வன்னியர் வேண்டுமா என்ற ரீதியில் வாக்குகளை சேகரித்து வருகிறதாம் பாமக.
கட்டாயத்தில் திமுக
பாமகவின் இந்த டெக்னிக்கலான பிரச்சார வாதம் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி வருகிறதாம். அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக சமூகப் பெரியவர்கள் பாமகவுக்கும், அதிமுகவுக்கும் உறுதி அளித்து வருவதாக சொல்கிறார்கள். மறுபக்கம் தேமுதிகவும் தனக்குள்ள செல்வாக்கை முழுமையாக அதிமுகவுக்குக் கொண்டு செல்ல தீவிரமாக உள்ளதாம். ஆக விக்கிரவாண்டியில் இது போன்ற பிரச்சினையை சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.
மொத்தத்தில் விக்கிரவாண்டியிலும் சரி, நாங்குநேரியிலும் சரி திமுக நிலவரம் சற்றே கலவரம் என்றுதான் கள நிலவரங்கள் சொல்கின்றன.