உளவுத்துறை கொடுத்த வார்னிங்? விஜய்க்கு போகும் ஆதரவு? கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு புறப்படும் ஸ்டாலின்?
சென்னை: கிறிஸ்துவர்களின் வாக்குகளை கவர ஆளும் திமுக தரப்பு முக்கியமான சில திட்டங்களை வகுத்து வருகிறதாம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இதற்கான திட்டங்களை ஆளும் திமுக வகுத்து வருகிறதாம்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக தெற்கு மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினருடனான தனது தொடர்புகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. பல தொகுதிகளில் கிறிஸ்துவர்களின் வாக்கு வங்கி முக்கியம் என ஆளும் திமுக கட்சி கருதுகிறது. அரசியல் களமிறங்கும் நடிகர் விஜய்யின் கட்சிக்கு கிறிஸ்துவர்களின் ஆதரவு மாறுவதைத் தடுப்பதே இதன் நோக்கம்.

விஜய் கிறிஸ்துவர்கள்
விஜய் கிறிஸ்துவ பின்னணியை கொண்டவர். அவரின் கட்சிக்கு நிதி கொடுக்கும் பல்வேறு பணக்காரர்கள் கிறிஸ்துவ பின்னணியை கொண்டவர்கள். விஜய்க்கு ஆலோசனைகளை வழங்கும் சில தலைகளும் கூட கிறிஸ்துவ பின்னணியை கொண்டவர்கள். விஜய் குறி வைப்பதில் முக்கியமானது கிறிஸ்துவர்களின் வாக்குகள். இத்தனை காலம் அந்த வாக்குகள் திமுகவிற்கு சென்றது. தற்போது அந்த வாக்குகள் விஜய்க்கு செல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
உளவுத்துறை சார்பாக ஆளும் திமுகவிற்கு சில எச்சரிக்கைகள் சென்றுள்ளதாம். உளவுத்துறை தகவல்கள் கூறுகையில், பாரம்பரியமாக திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சிறுபான்மையினர் வாக்குகள், விஜய்யின் அரசியல் வருகையால் புதிய அழுத்தங்களைச் சந்திக்கக்கூடும். கிறிஸ்தவ வாக்காளர்கள் ஆதரவு குறைந்தால் ஆளும் கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும், குறிப்பாக தென் மாவட்டங்களில் வாக்கெடுப்பு முறைகள் உணர்வுபூர்வமானவை என்றும் தலைமைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டின் தொடர்ச்சியாகவே முதல்வர், துணை முதல்வர் இருவரும் கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். விஜய்க்கு கிறிஸ்துவர்கள் வாக்குகள் செல்வதை தடுக்கவே கிறிஸ்துவர்களை குறி வைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. சமீப மாதங்களில் முதலமைச்சர் பல கிறிஸ்தவ தலைவர்களைச் சந்தித்துள்ளார். முன்னதாக நெல்லை கூட்டத்திற்குச் சென்றபோது, சி.எஸ்.ஐ. பேராயர் மற்றும் பல பாதிரியார்களை அவர் சந்தித்தார். பின்னர் தூத்துக்குடியில், பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த பேராயர்கள் மற்றும் பிஷப்களுடன் உரையாடினார். சமூகத்துடனான நீண்டகால உறவைப் பேணவே இச்சந்திப்புகள்.
ஸ்டாலின் முக்கிய சந்திப்பு
வரும் 20ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலிக்குச் செல்கிறார். அவர் காலை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மாலையில் பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ நல்லுறக்கப் பேரவையின் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்கிறார். அரசு நிகழ்ச்சி நடக்கும் அதே நாளில் ஒரு சமூக விழாவில் முதல்வர் பங்கெடுப்பது முக்கிய அரசியல் சமிக்கையாக பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினும் களமிறங்க உள்ளார்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். சிறுபான்மையோர் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் கிறிஸ்தவ வாக்காளர்களைத் தேற்றுவதற்கான திட்டமிட்ட நகர்வாகவே இவை பார்க்கப்படுகின்றன. இவர்களின் ஆதரவு சரிந்தால், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு சில முக்கிய தொகுதிகளில் பின்னடைவு ஏற்படும் என தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
இந்த அணுகுமுறை நல்லுறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இது கிறிஸ்தவ வாக்காளர்களை விஜய்யின் தவெக கட்சிக்கு மாறுவதிலிருந்து தடுக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சந்திப்புகளின் தாக்கம் 2026 தேர்தலுக்குப் பிறகே தெளிவாகும். இப்போதைக்கு, தமிழகத்தில் தேர்தல் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், தனது சிறுபான்மையினர் ஆதரவுத் தளத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் திமுக உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications