கடைசி ஆசை நிறைவேறாமலேயே கண்ணை மூடிய பாப்பாத்தி அம்மாள்... ஸ்டாலின் இரங்கல்
சென்னை: திமுகவில் பயன் கருதாமலும், பலன் எதிர்பாராமலும் வாழ்நாள் முழுதும் உழைத்த பாப்பாத்தி அம்மாள் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கடைசி ஆசை நிறைவேறும் முன்பே பாப்பாத்தி அம்மாள் மறைந்துவிட்டார். அவரது மறைவு தனக்கு வேதனை தருவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் திமுகவின் தீவிர தொண்டர் என்பதை அறிந்து கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரை அழைத்து பேசியதுடன் கருணாநிதியையும் சந்திக்க வைத்தார் ஸ்டாலின்.
இந்நிலையில் பாப்பாத்தி அம்மாள் மறைவு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அழைத்துப் பேசி
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரான 75 வயது மூதாட்டி பாப்பாத்தி அம்மையார் அவர்கள், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கழக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அறிவாலயத்திற்கு அழைத்து நான் ஆலோசனை நடத்தியபோது, தன் சொந்த செலவில் சென்னைக்கு வந்திருந்ததை அறிந்தேன். அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லையென்றாலும், கழகத்தின் மீது கொண்ட பற்றினை அறிந்து, அவரை அழைத்துப் பேசியதுடன், கலைஞர் அவர்களையும் சந்திக்கச் செய்தேன். மிகுந்த அன்புடனும் கழகப் பற்றுடனும் தலைவரிடம் வாழ்த்துப் பெற்று-தலைவரையும் வாழ்த்திய அந்த அம்மையார், என்னுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்த நிகழ்வு அது.
ஆழ்ந்த இரங்கல்
அம்மையார் பாப்பாத்தி போன்ற பயன் கருதா தொண்டர்களால் நிலைத்திருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். அம்மையார் அவர்கள் மறைவெய்தினார்கள் என்ற செய்தி வேதனையை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், இயக்கத்தினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்திடும் அதே நிலையில், இது கழகக் குடும்பத்தில் ஏற்பட்ட துயரம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆய்வுக்கூட்டம்
கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட வாரியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்திய போது, ஸ்டாலினை காண வேண்டும் என்பதற்காக பாப்பாத்தி அம்மாள் பாட்டி தனது சொந்த செலவில் சென்னை வந்திருந்தார். ஆனாலும் அவரால் ஸ்டாலினை பார்க்கமுடியவில்லை என்ற தகவல் ஊடகங்களில் பரவியதை அடுத்து, அவரை நிர்வாகிகள் மூலம் இல்லம் அழைத்து வந்து தேநீர் கொடுத்து உபசரித்தார் ஸ்டாலின். மேலும், தனது தந்தை கருணாநிதியிடமும் அவரை அழைத்துச்சென்றார். இது அப்போது பெரும் வைரலான செய்தி.
கடைசி ஆசை
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருணாநிதியை சந்தித்த போது பாப்பாத்தி அம்மாள் உதிர்த்த வார்த்தைகள், '' அய்யா நீங்க நூறு வயசுக்கு நல்லா இருக்கனும், இவர் முதலமைச்சர் ஆவதை நான் பார்க்கனும்(அருகில் நின்ற ஸ்டாலினை கைகாட்டி) '' என்றார். ஆனால் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற அவரது கடைசி ஆசை நிறைவேறும் முன்பே பாப்பாத்தி அம்மாள் இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டார்.