திமுக ராமருக்கு எதிரானது இல்லை.. உதயநிதி போட்டியிடவில்லை என்பது தவறான தகவல்.. ஆர்எஸ் பாரதி பேச்சு
சென்னை: திமுக என்றும் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் சட்டசபை தேர்தலில் உதயநிதி போட்டியிடவில்லை என்ற செய்தி தவறானது என்றும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, அதிமுகவுக்கு எதிராகப் பலமான கூட்டணியை அமைப்பதில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சி பொதுக்கூட்டம்
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின், தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் எந்தெந்த துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய தொலைநோக்கு திட்டங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்.
அதிருப்தி இல்லை
கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மார்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை சுமுகமாகத் தான் நடந்தது. அவர்கள் எங்களிடம் அதிருப்தி எதுவும் தெரிவிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகள் நிறைய உள்ளன இதனால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
பெரியண்ணன் மனோபாவத்தில் திமுக?
இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவுபெறும். திமுக என்றும் தனது தோழமை கட்சிகளிடம் பெரியண்ணன் மனோபாவத்தைக் காட்டியதில்லை. கூட்டணிக் கட்சிகளில் சில கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக விருப்பம் தெரிவிக்கின்றனர். புது சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று ஓட்டு வாங்குவது சிரமம், இதனால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் எனப் பேசு வருகிறோம். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
உதயநிதி போட்டி
திமுக சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவில்லை என ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அதே வேளையில், அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்.
ராமர் கோயில்
மத நல்லிணக்கம் அடிப்படையில் திமுக செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு நிதி உதவி கொடுத்துள்ளார். திமுக சார்பில் கொடுக்கவில்லை. நாங்கள் பாபர் மசூதி இடிப்புக்கு எதிரானவர்கள். ஆனால் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை. எங்கள் கட்சியின் பலர் பெயர் ராமசாமி, குப்புசாமி என உள்ளது. எங்கள் தலைவரே ராமசாமி தான்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.