கோடநாடு விவகார பின்னணியில் திமுக.. எதைவைத்து சொல்கிறார் தெரியுமா அமைச்சர் ஜெயக்குமார்?
சென்னை: கோடநாடு விவகாரத்தில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
இன்று மாலை ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசும்போது, மேலும் கூறியதாவது: கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் திமுக உள்ளது. சயான், மனோஜ் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
அதிமுக மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் திமுக செயல்படுகிறது. சயான் மற்றும் மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும், ஜாமின் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதில் இருந்தே இது உறுதியாகிறது.
திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் திமுக இரட்டை வேடம் கொண்டிருந்ததை மக்கள் அறிவர். தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிகளின் நிலைப்பாட்டில் மாறுபாடு இருக்கும்.
பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வகையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும். கட்சி அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது. பாஜக உட்பட எந்த இயக்கத்துக்கும் அச்சப்படாத கட்சி அதிமுக. நாங்கள் எதற்காக அச்சப்பட வேண்டும்? இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.