இந்துக்களை அரவணைப்பது திமுக.. கறுப்பர் கூட்டத்தோடு தொடர்புபடுத்துவது அற்பத்தனம்- ஆர்எஸ் பாரதி ஆவசேம்
சென்னை: கறுப்பர் கூட்டத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை, திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்று, அக்கட்சி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபகாலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் தவறான பிரச்சாரங்களை செய்வதற்கு திட்டமிட்டு ஒரு கூட்டம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
ஸ்டாலினுக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் பேராதரவை கண்டு தாங்கிக் கொள்ள முடியாத வயிற்று எரிச்சல்காரர்கள் திட்டமிட்டு இப்படிப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.
இருவர் கைதுக்குப் பின்னர் கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல்...தொடர் விசாரணை!!
ஸ்டாலின் பெயரில் டுவிட்டர் கணக்கு
அவற்றில் ஒன்றாக, நேற்றையதினம் தளபதி மு.க.ஸ்டாலின் மீது அவர் பெயராலே ஒரு போலியான டுவிட்டர் கணக்கை தயாரித்து, அதன் மூலமாக முருகரை, இழிவு படுத்திப் பேசியுள்ள, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு, சட்டரீதியாக திமுக ஆதரவு தெரிவிக்கும் என்று ஒரு போலியான பொய்யான ட்வீட் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இதை வன்மையாக திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிப்பதோடு மட்டுமல்ல இப்படிப்பட்ட செயல்களில் ஏற்கனவே ஈடுபட்டுவர்கள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் நிலுவையில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது
திராவிட முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் நான் கமிஷனரிடம் புகார் கொடுத்து இருக்கிறேன். ஆனால் எந்த நடவடிக்கையும் காவல்துறை சார்பில் எடுக்கப்படவில்லை. முருகனை பழித்துப் பேசியது வன்மையாக கண்டிக்க கூடிய ஒன்று என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மதசார்பற்ற அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால்தான் ஸ்டாலினும் கண்டித்திருக்கிறார். நிலைமை இப்படியிருக்க திட்டமிட்டு தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கிற காரணத்தினால், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மதத்தினரும் அதிகமாக ஸ்டாலினுக்கு ஆதரவு அளித்து திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு பின்னால் இருப்பதை மத்திய அரசின் உளவுத் துறையின் மூலமாக அவர்கள் அறிந்து கொண்டு, இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க இப்படிப்பட்ட அற்பத்தனமான காரியத்தை செய்து வருகிறார்கள் காவி கூட்டத்தினர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினாரோ, அப்போதே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார். அந்த அடிப்படையில்தான் கடந்த 70 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் பணியாற்றி வந்திருக்கிறது. எங்களையெல்லாம் வழிநடத்திச் சென்ற தலைவர் கலைஞர், இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்திய காலத்தில் தான் ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இந்து கோயில்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவார்கள்.
கும்பகோணம் மகாமகம்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் முதலில் நடத்தியது கும்பகோணம் மகாமகம் விழாவைத்தான், என்பதை இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த சிறியவர்களுக்கு நினைவூட்டுகிறேன். திராவிட முன்னேற்ற கழகம் ஐந்து முறை ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டில் இருக்கின்ற பல கோவில்களில் திருப் பணிகளை செய்து முடித்திருக்கிறது. ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. கபாலீஸ்வரர் கோவில் குளத்தை முதன்முதலில் தூர் வார தலையில் துண்டை கட்டிக் கொண்டு தானே இறங்கி தூர் வாரியவர் கருணாநிதி.
புட்டபர்தி சாய்பாபா
அந்த அளவுக்கு திராவிட முன்னேற்ற கழகம் மதச் சார்பற்று நடுநிலையாக பணியாற்றிக் கொண்டிருக்கிற இயக்கம். எல்லோராலும் சென்று பார்க்கப்பட்ட புட்டபர்த்தி சாய்பாபாவே, கோபாலபுரம் வந்து கருணாநிதியை பார்த்துவிட்டுச் சென்றார். கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, கருணாநிதியை சந்தித்துள்ளார். அனைத்து மதத் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருப்பது திமுக.
சட்ட நடவடிக்கை
திமுகவை, அத்தனை பேரும் ஆதரிக்கிறார்கள் என்ற காரணத்தினாலே திசை திருப்பும் நோக்கில், கந்த சஷ்டியை விமர்சனம் செய்தவர்களோடு திமுகவை இணைத்து பேசுகிறார்கள். இதற்கு நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்க உள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுக திமுக தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். திமுகவில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ளார்கள் என்றால், அதில் 1 கோடி தொண்டர்கள் இந்துக்கள்தான். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.