முடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்!
Recommended Video
சென்னை: இப்போதுதான் கருணாநிதி இருந்த திமுகவுக்கும், கருணாநிதி இல்லாத திமுகவுக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. அவரது மறைவுக்கு பிறகு திமுக ஒன்றும் அசுர வளர்ச்சி பெறவில்லை என்பதே உண்மையாக உள்ளது.
ஜெயலலிதா மறைந்து, கருணாநிதி வீட்டில் ஓய்வில் இருந்தபோதே தமிழகம் தலைவர்கள் இல்லாத வெறுமையை பெற்று விட்டது. இந்த சமயத்திலேயே செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் தனது திறமையை நிரூபித்து தமிழகத்தை தன் பக்கம் திருப்பி இருக்கலாம்.
கருணாநிதி போல சாதுர்யம், சாணக்கியத்தனம் இல்லை என்றாலும், பொறுமை, நிதானம், பக்குவம் போன்றவற்றின் அடிப்படையில் தனக்கென ஒரு ரூட்டில் ஸ்டாலின் பயணிக்கிறார் போலும் என நினைத்து தொண்டர்கள் அன்று சற்று அமைதி காத்தார்கள்.
இவ்வளவுதான் அதிமுக கெத்தா??.. தேமுதிகவை வீடு தேடி போய் சந்தித்து புதிய வரலாறு படைத்தது!!
கோட்டை விட்டார்
ஆனால் ஆர்கே நகரில் அது சுக்குநூறாக தகர்ந்து போனது. இந்த தோல்விக்கு பிறகாவது குறிப்பாக கருணாநிதி மறைவுக்கு பிறகாவது தனது பாணியை ஸ்டாலின் மாற்றி கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றபடி மக்களுக்கு அதிமுக அரசு மீது அதிருப்தி, மோடி அரசு மீது ஆத்திரம் எல்லாமே திமுகவுக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் அதையும் ஸ்டாலின் கோட்டைவிட்டு விட்டாரோ என்றே நினைக்க தோன்றுகிறது. காரணம் கூட்டணி அமைப்பதில் திமுக சந்தித்து வரும் தடுமாற்றங்கள்.
பலவீனமான கூட்டணி
பாமக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ அதுதான் பலம் வாய்ந்த கூட்டணி என்ற நிலைமை தமிழகத்தில் உருவானது. ஆனால் அன்புமணி ராமதாஸ் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டியும், அந்த கட்சியை திமுக உள்ளே இழுத்து போட முடியாமல் போய்விட்டது. அதேபோலதான் தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது திமுக. இத்தனைக்கும் தேமுதிக வரலாறு காணாத அளவில் தற்போது பலவீனமாக உள்ளது.
சறுக்கல்கள்
ஏற்கனவே கருணாநிதி விஜயகாந்த்தை உள்ளே கொண்டு வர முயற்சித்தும் முடியாமல் போனது. அப்போது தேமுதிக பலமாக இருந்தது. அதனால் அவர்கள் இழுத்தடித்து பேரம் பேசியதற்கு காரணம் இருந்தது. இப்போது 2-வது முறையாகவும் தேமுதிகவை கூட்டணிக்குள் அழைத்து வர முடியாமல் திமுகவுக்கு சறுக்கலையே தந்தது. ஆனால் தற்போது வெறும் 2 சதவீத ஓட்டுக்களை மட்டுமே கொண்டதாக மகா பலவீனமாக உள்ளது தேமுதிக. ஆனால் இதையே சரிகட்ட திமுகவால் முடியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.
மெகா கூட்டணி
எத்தனை எத்தனையோ அதிருப்தியை ஆளும் தரப்பு சம்பாதித்தாலும், சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர்கள் பேசிக் கொண்டிருந்தாலும், கூட்டணியை பக்கவாக போட்டு இன்று பலமான கூட்டணி என்ற மாயையாவது அதிமுக உருவாக்கி விட்டது.
ஆச்சரியம்
தேமுதிக வராவிட்டாலும் கூட அதிமுக கவலைப்படப் போவதில்லை என்பதுதான் ஆச்சரியகரமானது. ஆனால் திமுகவோ இப்போது உபயோகமில்லாத கிராம சபையை தேர்தல் நேரத்தில் போய் நடத்தி கொண்டு, கூட்டணி விஷயத்திலும் கோட்டை விட்டு சறுக்கிக் கொண்டிருக்கிறது.
வேகம் வேண்டும்
ஸ்டாலின் தனது அணுகுமுறையை, உத்திகளை மாற்ற வேண்டும்... சில அதிரடிகளில் அவர் இறங்கியாக வேண்டும்.... வேகம் கூட்டினால் மட்டுமே திமுகவுக்கும் நல்லது, அதன் கூட்டணிக்கும் நல்லது என்று திமுகவினரே பேசி வருகிறார்கள்.