நீட் அச்சத்தால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள திமுகதான் காரணம் - முதல்வர் ஆவேசம்
நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவும், 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவும் திமுகதான் காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார்.
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக 2010ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது திமுக கூட்டணியில் இருந்தது என்றும் தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் மற்றும் மன அழுத்தத்தினால் பதிமூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள திமுகதான் காரணம் என்றும் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபைக் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் 2வது நாளான இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது நீட் தேர்வு மனஅழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய மு.க ஸ்டாலின், 'நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீட்டுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை. மத்திய அரசு நம் மசோதாக்களை மதிக்கவில்லை என்று கூறினார்.
நீட் விவகாரத்தில் மத்திய அரசு ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கண்டன தீர்மானம்
ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் குரலையும் மத்திய அரசு கேட்க மறுக்கிறது. நீட் தேர்வில் தாலியை கழட்டிவிட்டு தேர்வை எழுத சொல்லியுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார் ஸ்டாலின்.
கருணாநிதி இருந்தவரை வரவில்லை
கருணாநிதி முதல்வராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தது திமுக. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றதும் திமுக தான். 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்த பிறகு தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது என்றார்.
வேடிக்கை பார்த்த அதிமுக
மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்தில் திணித்தபோது வேடிக்கை பார்த்தது அதிமுக தான். நீட் தேர்வை எதிர்த்த சட்டப்போராட்டத்தில் தோற்று போனது அதிமுக. நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்,தமிழக அரசின் நீட் எதிர்ப்பு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.நீட் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துக்கொள்ளவில்லை என்று பேசினார்.
எடப்பாடி பழனிச்சாமி பதில்
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசிய பின்னர் பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வை அறிமுகம் செய்தது யார் என்று இந்த நாடே அறியும் என்று கூறினார். நீட் தேர்வு எப்போ வந்தது யார் அறிமுகம் செய்தார்கள் என்று தெரியும்.
திமுகதான் காரணம்
நீட் தேர்வுக்கு எதிராக எதிர்த்து வாதாடியது அதிமுகதான். நீட் தேர்வு கொண்டு வந்தது நாங்கள் இல்லை. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் நீட் தேர்வு சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தது. நீட் மன அழுத்தத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு திமுகதான் காரணம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிக ஆவேசமாக பேசினார்.