ஆட்சியை பிடிக்காமல் போக அழகிரி காரணமாக கூடாது.. பதைபதைப்பில் திமுக.. இறுதி சமரசம் தீவிரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனால் அதற்கு மு.க. அழகிரி காரணமாக இருந்துவிடக் கூடாது என்கிற பதைபதைப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் உள்ளது. இதனால் மு.க. அழகிரியை சமாதானப்படுத்தும் இறுதி முயற்சிகளை கருணாநிதி குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் எனது பங்கும் இருக்கும் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார் மு.க. அழகிரி. அத்துடன் அவரது ஆதரவாளர்கள், கலைஞர் திமுக கட்சியை அழகிரி தொடங்குவது உறுதி; இதுதான் கலைஞர் திமுக கொடி என ஒரு கொடியையும் பகிர்ந்து வருகின்றனர்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு - திமுக வழக்கு ஜன. 7க்கு ஒத்திவைப்பு
அழகிரி பேட்டி
இந்த நிலையில் இன்று சென்னை வந்த மு.க. அழகிரி கோபாலபுரத்துக்கு சென்று தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ஜனவரி 3-ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவை அறிவிப்பேன் என கூறினார்.
Recommended Video
அழைத்தது கருணாநிதி குடும்பம்
இது தொடர்பாக அழகிரி வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அழகிரியின் சென்னை பயணத்துக்கு காரணமே கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்த அழைப்புதான். சட்டசபை தேர்தலில் திமுக வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் மு.க. அழகிரி தனிக் கட்சி என முடிவு எடுத்தோ அல்லது திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தோ பகிரங்கமாக வெளியே வந்தால் அது நிச்சயம் திமுகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும்.
காலத்துக்கும் அவப்பெயர்
கருணாநிதியின் கட்சியான திமுக ஆட்சியை பிடிக்காமல் போனதற்கு கருணாநிதி மகன் அழகிரியே காரணம் என சொல்லுவார்கள். இந்த அவப்பெயர் வேண்டாமே என்கிற நிலையில்தான் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதனால்தான் கடைசி கட்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள். திமுகவின் அறக்கட்டளைகளில் ஒன்றில் அழகிரி மகன் நியமிக்கப்பட்டுவிட்டாலே பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். இதைத்தான் அழகிரி எதிர்பார்க்கிறார் என்கின்றனர்.
சென்னை பேச்சுவார்த்தை விவரங்கள்
இன்றைய பேச்சுவார்த்தையில் கருணாநிதி குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதை அடுத்த சில நாட்களில் தமது ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார் அழகிரி. அதன்பின்னர் 3-ந் தேதி அதிகாரப்பூர்வமாக ஆலோசனை கூட்டம் நடத்தி சட்டசபை தேர்தலில் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து விவாதிக்க உள்ளார் அழகிரி.