'ஆபரேஷன் சன்'.. அதிரும் அதிமுக.. தம்பிதுரை மட்டுமில்லை, மற்றொரு எம்.பியும் திமுக பக்கம்?
Recommended Video
சென்னை: அதிமுக மூத்த தலைவரும், லோக்சபா துணை சபாநாயகருமான, தம்பிதுரையை, திமுக வலைவீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மற்றொரு அதிமுக எம்பியையும், அக்கட்சி இழுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலையொட்டி, பாஜக மற்றும் அதிமுக நடுவே கூட்டணி அமைய உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இந்த நிலையில்தான் கரூர் தொகுதி எம்பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தும்பிதுரை, பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வருகிறார்.
பாஜகவுடன், அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தம்பிதுரை கடந்த சில மாதங்களாகவே, பாஜகவையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
கனிமொழி கருத்து
தமிழகத்திற்கு எந்த நலத்திட்டத்தையும் பாஜக அரசு கொண்டுவரவில்லை என்று கூறிவருவதோடு, உயர் ஜாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக லோக்சபாவில் கடும் முழக்கத்தையும் முன் வைத்தார். "சரியான மனிதர் தவறான கட்சியில் இருக்கிறார்" என்று கருணாநிதி ஒருமுறை வாஜ்பாய் பற்றி கூறினார். அதேபோல தம்பிதுரையும், சரியான மனிதர் ஆனால் தவறான கட்சியில் இருக்கிறார் என்று திமுக எம்.பி.யான, கனிமொழி தெரிவித்தார். தம்பிதுரையை தங்கள் பக்கம் இழுப்பதற்காக திமுக முடிவு செய்துவிட்டதாகவும், அதன் வெளிப்பாடுதான், கனிமொழியின் கருத்து என கூறப்படுகிறது.
தம்பிதுரை
கொங்கு மண்டலத்தில் திமுக பலமிழந்து காணப்படும் நிலையை மாற்றி, கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. தம்பிதுரை திமுகவில் சேர்த்துக்கொண்டால் மேற்கு மண்டலத்தில் திமுக மேலும் பலம் பெறும் என்று அக்கட்சி தலைவர்கள் எண்ணுகிறார்கள். எனவேதான் பாஜக-அதிமுக கூட்டணி அமைத்தால் அதைக் காரணமாக வைத்து கொண்டு தம்பிதுரையை திமுக பக்கம் இழுக்க முயற்சி நடக்கிறது.
அன்வர் ராஜா கோபம்
அதேபோல மற்றொரு அதிமுக, எம்பியையும் திமுக தன் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் தொகுதியின் அதிமுக எம்பி அன்வர் ராஜா தான் அவர். முத்தலாக் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அன்வர்ராஜா, மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். ஆண்டவன் கொடுக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது, என்று மத்திய அரசுக்கு சாபம் இடுவதை போல அன்வர் ராஜா பேசினார். அதிமுக தலைமை, பாஜக தலைமையுடன் இணக்கமாக செல்லும் நிலையில் அன்வர் ராஜாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
வாக்குகள்
இந்த நிலையில்தான், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால் அன்வர்ராஜாவால் அதிமுகவில் தொடர முடியாத சூழ்நிலை நிலவும் என்பதை புரிந்து கொண்டு அவரையும் திமுகவில் இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ராமநாதபுரத்தில் கணிசமாக உள்ள சிறுபான்மை வாக்குகளை, மொத்தமாகவே திமுக பக்கம் திருப்பி விடலாம் என்ற திட்டம் உள்ளதாம்.
சிறுபான்மையினர் செல்வாக்கு
முத்தலாக் சட்டம் கொண்டு வந்த மத்திய பாஜக அரசு உடன், அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டதால், கட்சியை விட்டு விலகிவிட்டதாக, காரணம் கூறினால், அன்வர் ராஜாவுக்கு சிறுபான்மையின மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்கு அதிகரிக்கத்தான் செய்யும் என்பதால் இது பெரிய சிரமமாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஆக மொத்தம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் பெரும் குழப்பம் நிகழ வாய்ப்புள்ளதாம். அதிமுக மீது திமுக நடத்தப்போகும் 'ஆபரேஷன் சூரியன்' பற்றிதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.