முரசொலி நிலம்- டாக்டர் ராமதாஸ், பாஜக சீனிவாசன் மன்னிப்பு கேட்க கோரி திமுக நோட்டீஸ்
Recommended Video
சென்னை: முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜகவின் சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ1 கோடி நட்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் திமுக தெரிவித்துள்ளது.
அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், பஞ்சமி நில மீட்பு குறித்து படம் பேசுவதாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலாக, திமுகவின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது மிகப் பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து முரசொலி நிலம் தொடர்பான பட்டாவை திமுக வெளியிட்டது. ஆனால் மூலப்பத்திரம் எங்கே என டாக்டர் ராமதாஸ் தரப்பு கேட்டது.
இதற்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், தாம் மூலப் பத்திரத்தை தர தயாராக இருக்கிறோம்; அப்படி நாங்கள் வெளியிட்டுவிட்டால் ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலக வேண்டும் என்கிற சவாலை ஏற்க தயாரா? என கேள்வி எழுப்பினார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியது.
மூலப்பத்திரம் எங்கே என்பதை முன்வைத்து ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டன. இதனிடையே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜகவின் சீனிவாசன், முரசொலி நிலம் தொடர்பாக புகார் மனு அளித்திருந்தார்.
இதற்கு விளக்கம் கோரி முரசொலிக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று ஆணையத்தில் ஆஜரான திமுகவின் சட்டத்துறை செயலாளரும் முரசொலி அறங்காவலருமான ஆர்.எஸ். பாரதி, இதனை விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை என்றார். அப்போது பாஜக மற்றும் அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், பாஜகவின் சீனிவாசனுக்கு ஆர்.எஸ். பாரதி வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முரசொலி நிலம் தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு 48 மணிநேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ1 கோடி நட்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.