தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 21-ம் தேதி நடக்கிறது.. அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவிப்பு!
சென்னை: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 21-ம் தேதி மாலை நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பதவியேற்ற பின்னர் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற 21 -ம் தேதி தொடங்கவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டசபைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 21-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-06-2021 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கோவி. செழியன் கூறியுள்ளார்.