மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தர அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளது.
முரசொலி நிலம், மிசா கைது விவகாரம், உள்ளிட்ட விவகாரங்களில் ஸ்டாலினின் இமேஜை சரிக்கும் வகையில் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதற்கு உரிய ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்க திமுக தகவல் தொழில் நுட்ப அணி அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதோடு வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.
புதிய அணி
திமுகவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் தகவல் தொழில் நுட்ப அணி புதிதாக தொடங்கப்பட்டது. அந்த அணிக்கு மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும், உலக விவகாரங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவருமான தியாகராஜன் செயலாளராக இருக்கிறார். அவருக்கு கீழ் அண்ணா நகர் கார்த்திக், இலக்குவன் உள்ளிட்டோர் அந்த அணியின் துணைச் செயலாளர்களாக இருக்கிறார்கள்.
ஆர்வம்
மாநிலம் முழுவதும் படித்த, பணி காரணமாக நேரடி கள அரசியல் செய்யமுடியாத, அதே வேளையில் திமுக சித்தாந்தங்கள் மீது பற்றுக்கொண்ட நபர்களை தேடி தேடி சந்தித்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கினார் தியாகராஜன் எம்.எல்.ஏ. இதற்காக மாவட்டச் செயலாளர்களிடம் ஒரு பைசா வாங்காமல், தனது சொந்தப் பணத்தை செலவு செய்துமாநிலம் முழுவதும் பயணம் செய்து நிர்வாகிகளை நியமித்தார் தியாகராஜன்.
ஒரு சிலர் மட்டும்
திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் பொறுப்புக்கு வந்தவர்கள் தொடக்கத்தில் வேகமாக செயல்பட்டனர். பின்னர் நாட்கள் ஓட ஓட என்னவென்று தெரியவில்லை அவர்களின் வேகம் அப்படியே குறைந்தது. இதனிடையே பொன்னி, வடுவூர் கதிரவன் போன்ற ஒரு சிலர் மட்டும் இப்போதும் அதிமுக, பாஜகவுக்கு சுடச்சுட பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அறிவுறுத்தல்
மிசா கைது விவகாரம், முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இமேஜ் சரியும் வகையில் அண்மைக்காலமாக அதிமுக, பாஜக கட்சிகளில் சமூக வலைதளப்பிரிவினர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கான பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது திமுக ஐ.டிவிங். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மறுத்து சுடச்சுட பதில் கொடுப்பதற்காகவே தரவுகளை திரட்டுவதற்கு தனி டீம் அமைக்கப்பட இருக்கிறது.