உங்களை வேற மாதிரில்ல நினைச்சேன்.. வியந்துபோய் பாராட்டிய பேராசிரியர்.. ஜவாஹிருல்லா கண்ணீர்
மமக தலைவர் ஜவாஹிருல்லா புகழாரம் சூட்டிஉள்ளார்
சென்னை: "ஜவாஹிருல்லாவா இப்படி? அவரை நான் இதுவரை வேற மாதிரிதானே நினைச்சிட்டு இருந்தேன்.. நல்லா பேசுறாரே" என்று என்னை மனசார பாராட்டியவர் பேராசிரியர் அன்பழகன் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். வயது, அனுபவத்தையும் தாண்டி, நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதை உடனே, பகிரங்கமாக தெரிவிக்கக்கூடியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
Recommended Video
பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு ஏராளமான தலைவர்கள் திரண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "கல்வியாளராக, களப் போராளியாக, இலக்கிய வாதியாக, சொற்பொழிவாளராக என ஏராளமான ஆளுமைத் திறன்களைப் பெற்றிருந்த பேரா. அன்பழகன், ஓர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் இலக்கணமாக இருந்தவர். தனது நலனை விடவும், இயக்கத்தின் நலன் பெரிது என்று வாழ்ந்து காட்டியவர்.
தமிழினம்
திமுக எத்தனையோ புயல்களை எதிர்கொண்ட போதும், மலைகுலைந்தாலும், நிலைகுலையாத மாமணியாய், பேரா.க. அன்பழகன் நின்றுள்ளார். அவர் பேராசிரியர் என்று அடைமொழியில் கொண்டாடப்படுவது, பேராசிரியர்கள் அனைவருக்குமே பெருமை... தமிழினத்திற்காகத் தொண்டாற்றி மிகச் சிறந்த மாற்றங்களையும் அவர் கொண்டு வந்தார். எம் நெஞ்சமெல்லாம் நிறைந்த பேரா.க.அன்பழகன் கடந்த 20 ஆண்டுகளாக என்னுடன் நட்பாக இருந்து அவர் என்மீது காட்டிய பரிவும், பாசமும் அளப்பரியது" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒன் இந்தியா
20 ஆண்டு கால நட்பு என்று ஜவாஹிருல்லா குறிப்பிட்டதும், உடனடியாக "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசினோம்.. உங்களுக்கும் பேராசிரியருக்குமான உறவு பற்றி சொல்ல முடியுமா? என்று கேட்டோம். பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தாலும் அந்த தருணத்திலும் நம்மிடம் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் ஜவாஹிருல்லா... பேராசிரியர் அன்பழகனை பற்றி பேராசிரியர் ஜவாஹிருல்லா தொண்டை குரல் கமற.. இதயம் நிறைந்த துக்கத்துடன் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை:
அப்துல் ரஹீம்
"பேராசிரியர் குறித்து எனக்கு ரெண்டு சம்பவம் மறக்கவே முடியாது.. கடந்த 2006-ம் ஆண்டு அப்துல் ரஹீம் என்பவர் மாநில செயலாளராக இருந்தார்.. அப்போ சட்டமன்ற தேர்தல் நேரம்... நாங்க எல்லாரும் தீவிரமான வாக்கு சேகரிச்சிட்டு இருந்தோம்.. வாணியம்பாடியில் அப்துல் ரஹீம் பிரச்சாரம் செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி இன்னொரு பிரச்சாரத்துக்கு கும்பகோணம் போகணும்.. அப்படி போகும்போது சேலம் அருகே சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
சோகம்
பெருத்த அதிர்ச்சியிலும், சோகத்திலும் கண்ணீர் கடலில் நாங்கள் மிதந்து கிடந்தோம்.. அவரது உடல் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.. விஷயத்தை கேள்விப்பட்டதும் பேராசிரியர் விரைந்து வந்து விட்டார்.. இது எங்களுக்கு ஆச்சரியத்தைதான் தந்தது.. காரணம், பரபரப்பான தேர்தல் சமயம் அது.. மற்றொரு காரணம் பேராசிரியர் அப்போது ஒரு வேட்பாளரும்கூட.. அவரும் களத்தில் போட்டியிடுகிறார்!! மாற்று கட்சி, மாற்று வேட்பாளர் என்றெல்லாம் அவர் பார்க்கவே இல்லை.. தன்னுடைய இறுதி அஞ்சலியை நேரில் செலுத்தியதுடன், எங்கள் கைகளை இறுக்கமாக பற்றி ஆறுதல் சொல்லியதை எங்களால் இன்னும் மறக்க முடியாது!
வர்மக்கலை
அதேபோல இன்னொரு சம்பவம்.. ஒருமுறை மாற்று மருத்துவ குறித்து ஒரு கூட்டம் நடந்தது.. அதில் பேராசிரியரும் கலந்து கொண்டார்.. அந்த சமயத்தில் நான் ஒரு சிகிச்சையில் இருந்தேன்.. எனக்கு ரொம்ப நாளாக மூட்டு வலி இருந்தது.. அதனால் ஆயுர்வேதம் அதாவது வர்மக்கலை சிகிச்சை எடுத்து கொண்டிருந்தேன்.. அதனால் அந்த கூட்டத்தில் வர்மக்கலை சிகிச்சை குறித்த பலவிஷயங்களை எடுத்து சொன்னேன்.. பின்னர் பேராசிரியர் பேச வந்தார்.
பாராட்டு
அப்போது அவர், "எனக்கு முன்னாடி பேசிய ஜவாஹிருல்லா பேசியதை கேட்டு நான் பிரம்மித்து விட்டேன்... அவரை நான் இதுவரை வேற மாதிரிதான் நினைச்சிட்டு இருந்தேன்.. இவ்வளவு நிபுணத்துவமாக இருக்கிறாரே" என்று நீண்ட நேரம் என்னை பற்றியே புகழ்ந்து பேசினார்.. அப்போதுதான் நான் பேசியதை எந்த அளவுக்கு அவர் உற்று கவனித்து இருக்கிறார் என்றும், வயதில் சிறியவராக இருந்தாலும் நல்ல விஷயத்தை உடனே பாராட்ட தவறாதவர் என்றும் நான் புளகாங்கிதம் அடைந்துவிட்டேன்.
பாசம்
அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது நிறைய விஷயங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்.. என்றாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு நிறைய அட்வைஸ் தருவார்.. பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.. அந்த பாசமும், அன்பும் அளவிட முடியாதது.. இப்பகூட அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுதான் வந்தேன்.. அப்போது அங்கு அவருடைய பேரன் என்னிடம் வந்து பேசினார்.
தாத்தா
அப்போது, "டிவி விவாதங்களில் நீங்கள் பேசுவதை தவறாமல் பார்ப்பார் தாத்தா.. ஜவாஹிருல்லா அதிகமாக பேசமாட்டார்.. ஆனால் பேசிறதை ஆழமாக பேசுவார்... குறைவான வார்த்தைகளில் நிறைவான கருத்துக்களை எடுத்து சொல்ல ஜவாஹிருல்லா போன்றோரால் தான் முடியும்" என்று உங்களை பத்தி தாத்தா அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்" என்று சொல்வாராம்.." என்று தன் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஜவாஹிருல்லா!!