திமுகவிற்கும், கமல்ஹாசனுக்கும் என்னதான் பிரச்சினை?
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள்தான் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் கூட்டணிக்காக பரபரத்துக் கொண்டு உள்ளது.
திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் என ஒவ்வொரு கட்சியும் தங்கள் தோழமை கட்சிகளை தேடும் முயற்சியிலும், அதை தேர்தல் கூட்டணியாக மாற்றும் முயற்சியிலும், ஈடுபட்டு வருகின்றன.
ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்களுக்கு எழுந்துள்ள ஒரு கேள்வி, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஒரே அணியில் திரளுமா என்பதுதான்.
முற்போக்கு கொள்கை
இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரே மாதிரியான கொள்கை அல்லது, முற்போக்கு கொள்கை கொண்ட கட்சிகள் எங்களோடு இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்றுதான் திமுக சீனியர் தலைவர்கள் கூறி வருகிறார்கள். எனவேதான், முற்போக்கு பேசும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டம்
ஆனால், சமீபத்தில் மேகதாது பிரச்சினைக்காக, திமுக தனது தோழமை கட்சிகளுடன் ஆலோசனை நடத்த அழைப்புவிடுத்தது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை. இதை கமல்ஹாசனும் கூட உறுதி செய்தார். எங்கள் கட்சிக்கு அழைப்பு வரவில்லை என்றார்.
ஆ. ராசா விளக்கம்
திமுகவின் இந்த நிலைப்பாடு காரணமாக, திமுக-மக்கள் நீதி மய்யம் கூட்டணி பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். மேகதாது பிரச்சினையில், திமுக தோழமை கட்சிகளுக்குத்தான் ஆலோசனைக்கு அழைப்புவிடுத்தோம். கமல்ஹாசன், தன்னை முற்போக்குவாதி என்கிறார். பெரியார் கொள்கைகளை பின்பற்றுவேன் என்கிறார். ஆனால், திமுக இல்லாத கூட்டணி என்று கூறியுள்ளார்.
அழைப்பு இல்லை ஏன்
திமுக இல்லாத கூட்டணி என்று அவர் ஏன் பேசுகிறார் என்று தெரியவில்லை. 2ஜி என்றார்கள். அதுவும் இல்லை என்று ஆகிவிட்டது. அப்படியும் திமுகவுடன் இணைவதற்கு ஏன் தயக்கம். அதேநேரம், சேர்ந்துதான் ஆக வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு விருப்பம் இருக்கலாம். அது அவர்கள் விருப்பம். எனவேதான் கமல்ஹாசன் கட்சிக்கு, திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கவில்லை என்றார்.
நோ கூட்டணி
ஆ.ராசா பேட்டியின் மூலம், லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. திமுக இல்லாத கூட்டணி என கமல்ஹாசன் கூறியிருப்பதன் மூலம், அவரும் திமுக கூட்டணியை விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.