"10 + 40 ஆயிரம்" .. குஷியில் திமுக.. களிப்பூட்டும் கணக்குகள்.. எடப்பாடி பழனிச்சாமியும் கூல்தானாம்.!
சென்னை: கடந்த 6-ம்தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்குப்பதிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.. அதேபோல, கமல், தினகரன், சீமானின் வாக்குகள் யாருக்கு எதிராக திரும்பி உள்ளன என்ற சலசலப்பு பேச்சுக்களும் கிளம்பி உள்ளன.
இந்த முறை 5 முனை போட்டி நடந்தது.. 3வது அணி அமையுமா என்ற டவுட் ஆரம்பத்தில் இல்லாமல் இருந்தது.. இதற்கு காரணம், எப்படியும் கமலை திமுக உள்ளே இழுத்து கொள்ளும் என்றும், அப்படி கமல் 3வது அணி அமைத்தால், அதில் சீமானும் இணைவார் என்றும் கணிக்கப்பட்டது.. அதேபோல, அதிமுகவுடன் சசிகலா இணைவார், அல்லது கூட்டணியாவது வைப்பார் என்றும் பேசப்பட்டது.
கடைசியில் இது எதுவுமே இல்லாமல், 5 பேரும் தனித்தனியாக நின்றுவிட்டனர்.. தங்களால் முடிந்த அளவுக்கு கூட்டணியை பலப்படுத்தினர். இப்போது 5 முனைப்போட்டி என்றாலும், வழக்கம்போல, திமுக, அதிமுகவுமே பிரதான ஜாம்பவான்களாக களத்தில் உள்ளனர்.
தினகரன்
கமல், சீமான், தினகரன் ஆகியோன் வாக்குகள் யாருக்கு போயிருக்கும்? என்பதுதான் கலக்கத்தை தந்துவருகிறது.. தேர்தல் நாளன்றே, இந்த பேச்சு ஆரம்பமாகிவிட்டது.. தினகரனுக்கு செல்லும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்குகளே என்பதால், இதில் அதிமுக சற்று தடுமாற்றத்தில் உள்ளது.. இதனால் தென்மண்டலத்தில் ஓட்டு வங்கி அடிவாங்கும் நிலைமையும் உள்ளதாக வாக்குப்பதிவினை வைத்து சொல்லப்பட்டு வருகிறது.
பிந்தைய நிலவரம்
இப்போது, கமலும், சீமானும்கூட இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. சீமான், தினகரன், கமல் 3 பேருமே இந்த தேர்தலில் மிகப்பெரிய அதிர்வலையை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பதை தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் சொல்கிறது.
10 தொகுதிகள்
"அமமுக விழுந்து விழுந்து 10 தொகுதிகளில் வேலை பார்த்துள்ளது.. அதனால் அந்த வகையில் கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகிய 10 தொகுதிகளில் சாதகமான முடிவை எதிர்நோக்கி தினகரன் இருப்பதாக சொல்கிறார்கள்.. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. சசிகலா கோயில் கோயிலாக சென்றபோது, இந்த தொகுதிகளை குறி வைத்து அந்த ஆன்மீக அரசியல் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு எழுந்தது.
திமுக
அதனால்தான் அதிமுகவையும், அமமுகவின் இந்த 10 தொகுதி நம்பிக்கை சற்று அசைத்து பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.. தேர்தல் தினத்தன்று, முதல்வர் அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனையில், முதலில் கேட்டறிந்தது அமமுகவின் வாக்குப்பதிவு விவரங்களைதானாம்.. திமுகவை பற்றிகூட அவ்வளவாக கவலைப்படவில்லையாம்.. அதேபோல, சீமான், கமலின் வாக்குகள் திமுகவின் வாக்கு வங்கியைதான் பிரித்துள்ளதாகவும், அதனால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றும் ஒரு "கூல் ரிப்போர்ட்" எடப்பாடி தரப்புக்கு சென்றுள்ளது.
ஓட்டுக்கள்
அதாவது, கடந்த எம்பி தேர்தலை போலவே, நகர்ப்புற ஓட்டுக்கள் கமலுக்கும், கிராமப்பகுதி ஓட்டுக்கள் சீமானுக்கும் டிரான்ஸ்பர் ஆகி உள்ளதாம்.. அதாவது, இவையெல்லாம் திமுகவுக்கு செல்லக்கூடிய வாக்குகள் என்கிறார்கள்.. இந்த நம்பிக்கையில்தான், குறைந்தது 40 ஆயிரம் வாக்குகள் பெறுவோம் என்கிறார்கள் சீமான் தரப்பினர். இதையேதான் கமல் தரப்பிலும் சொல்லப்படுகிறது.
கணக்கு
அதாவது, கமல் சீமான் இருவரும் சேர்ந்து திமுகவின் ஓட்டுக்களை பிரித்துள்ளதால் அதிமுகவுக்கு சாதகமாகும் என்று சொல்லப்படுகிறது.. ஆனால், இவர்கள் திமுகவுக்கு ஏற்படுத்திய தாக்கத்தைவிட, அமமுக அதிமுகவுக்கு ஏற்படுத்திய தாக்கம்தான் அதிகமாம்.. சீமானும், கமலும் எவ்வளவுதான் வாக்குகளை பிரித்தாலும் அது திமுகவுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இந்த பதிவான வாக்கு சதவீதத்தை வைத்து போடப்பட்டு வரும் கணக்காகும்..!