"இந்த நாள் இனிய நாள்".. பாஜகவின் வெந்த புண்ணில் வெந்நீரை பாய்ச்சிய கனிமொழி!
பாஜக தோல்வி குறித்து கனிமொழி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: "பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட அச்சேதின் இதோ இன்று வந்துவிட்டது" என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி 5 மாநில தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நாடுதழுவிய அளவில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.
வரப்போகிற நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வருகிறார்.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். அதற்கான ஆலோசனைகளிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பலத்த அடி
இந்நிலையில்தான், 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் பாஜகவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது. கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்த நிலைக்கு அது போய் விட்டது.
தலைவர்கள் கருத்து
இந்த தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக உள்ள மெகா கூட்டணி தலைவர்களுக்கு கூடுதல் தெம்பையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. இது குறித்து பெரும்பாலான தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அச்சே தின்
திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் பிரதமர் மோடியின் முக்கிய ஸ்லோகமான அச்சே தின் என்ற வார்த்தையை பயன்படுத்தியே ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.
|
இனிய நாள்
அதில், "பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட #AccheDin இதோ இன்று வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள் என கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.