புதுவையில் 5-வது முறை திமுக வசமாகுமா ஆட்சி? முதல்வர் வேட்பாளராகவே களமிறங்கிய ஜெகத்ரட்சகன்
சென்னை: புதுச்சேரியில் 5-வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. புதுவையின் திமுக முதல்வர் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் களப்பணியில் இறங்கியும் விட்டார்.
புதுச்சேரியில் 1969-ம் ஆண்டு முதல் 1974 -ம் ஆண்டு வரை திமுகவின் எம்.ஓ.ஹெச். பரூக் முதல்வராக இருந்தார். அதன்பின்னர் 1980 முதல் 1983-ம் ஆண்டு வரை திமுகவின் எம்.டி.ஆர். ராமச்சந்தின் முதல்வராக பதவி வகித்தார்.
புதுச்சேரியில் திமுக தனித்து போட்டி? முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்? நாளை மறுநாள் முடிவு அறிவிப்பு?
புதுவை முதல்வர்கள்
1990-91-ல் மீண்டும் திமுகவின் எம்.டி.ஆர். ராமச்சந்தின், 1996- 2000-ம் ஆண்டு வரை திமுகவின் ஜானகிராமன் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். கடந்த 21 ஆண்டுகளாக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சண்முகம், ரெங்கசாமி, வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோர் முதல்வர் பதவியில் இருந்துள்ளனர்.
புதுவையில் ஜெகத்ரட்சகன்
இப்போது மீண்டும் ஆட்சி அமைப்பதில் திமுக தீவிரமாக இறங்கிவிட்டது. ஜெகத்ரட்சகன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். புதுவையில் வன்னியர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். பொதுவாக புதுவையில் ஜாதி அடிப்படையில் வாக்களிப்பது இல்லை என்பது யதார்த்தமும் கூட.
மக்களின் தேர்வு
இருந்தபோதும் புதுவையை பொறுத்தவரையில் எளிதாக அணுக கூடியவர், செலவுகளுக்கு தயங்காதவர் ஒருவரைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்கின்றனர் அரசியல் கட்சியினர். இது ஜெகத்ரட்சகனுக்கு மிகவும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
திமுக களப்பணி தீவிரம்
சட்டசபை தேர்தல் செலவுகளைப் பொறுத்தவரை ஜெகத்ரட்சகனுக்கு எளிதானது ஒன்று. இப்போதே ஜெகத்ரட்சகன் களப்பணிகளை தொடங்கிவிட்டார். புதுச்சேரி திமுகவினரும் ஜெகத்ரட்சகனை ஏற்றுக் கொண்டு தேர்தல் பணிகளில் ஜரூராக இறங்கியுள்ளனர். பலவீனமாக உள்ள அத்தனை கட்சி பிரமுகர்களையும் வளைத்து சரி செய்யும் பணிகளும் புதுவையில் தீவிரமாகிவிட்டதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5-வது முறையாக ஆட்சியை கைப்பற்றுமா திமுக? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.