ஆஹா பிரமாதம்! கிடைச்சாச்சு வெற்றி....காங். தேர்தல் அறிக்கைக்கு ஸ்டாலின் பாராட்டு
சென்னை: காங்கிரசின் தேர்தல் அறிக்கையால் தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழக மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி இன்று காலை வெளியிட்டார். இதில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசிலுள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற திமுகவின் முழக்கத்தை பிரதிபலிக்கும் முறையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை உள்ளது.
தமிழகம் மீது ஸ்பெஷல் அக்கறை.. முக்கிய கோரிக்கைகளுக்கு எல்லாம் கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்!
காங்கிரசின் தேர்தல் அறிக்கையால் தேர்தல் முடிவுக்கு முன்பே தமிழக மக்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. ஏழ்மை ஒழிப்புத் திட்டம் இந்திய வரலாற்றில் முக்கிய சாதனையாக அமையப் போகிறது. நீட் தேர்வு ரத்து என்ற காங்கிரசின் வாக்குறுதி தமிழக இளைஞர்கள் இதயத்தில் பால் வார்க்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்" இவ்வாறு பாராட்டினார்.