பஸ் ஸ்டிரைக்: சம்பளம் கொடுக்க கூட காசில்லையா.. இப்படி போராட வச்சுட்டீங்களே.. அரசை சாடிய ஸ்டாலின்
சென்னை: அதிமுக அரசு மாத சம்பளத்தை பெறுவதற்கு கூட போக்குவரத்து ஊழியர்களை திடீர் போராட்டத்தில் தள்ளி, மக்களை அவதிப்பட வைத்ததது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மாத ஊதியம் அந்த மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஆனால் ஜுன் மாதத்திற்கான ஊதியம் நேற்று வரை கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் கேட்டதற்கு போககுவரத்து நிர்வாகம் ஜுன் மாத ஊதியத்தில் 60 சதவீதம் மட்டுமே கொடுக்கப்படும் என கூறியதாக தகவல்கள் பரவியது. மீதி ஊதியம் எப்போது வரும் என்பது பற்றியும் பதில் வரவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். சென்னையில் பல்வேறு பணிமனைகளில் பேருந்துகளை நிறுத்திவைத்துவிட்டு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் வாரத்தின் முதல் வேலை நாளான இன்று அலுவலகம் செல்வோர், பள்ளி செல்வோர் சென்னை மிகவும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் ஜுன் 30ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலேயே ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை என்றும் 60 சதவீதம் ஊதியம் மட்டும் வழங்கப்படும் என்பது வதந்தி என்றும் போக்குவரத் துறை மறுத்தது. மேலும் இன்று இரவுக்கு அனைத்து போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் அதிமுக அரசு மாத சம்பளத்தை பெறுவதற்கு கூட போக்குவரத்து ஊழியர்களை திடீர் போராட்டத்தில் தள்ளி, மக்களை அவதிப்பட வைத்ததது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சம்பளம் கொடுக்க கூட தமிழக அரசிடம் பணம் இல்லை என்பது அதிமுக ஆட்சியின் நிர்வாக தோல்வியையும், நிதிமேலாண்மையில் தள்ளாடுவதையுமே காட்டுகிறது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.