கொங்கு மண்டலம் மீது அதீத கவனம் செலுத்தும் ஸ்டாலின்.. தேர்தல் பணிகளை மேற்பார்வையிட சிறப்புக் குழு..!
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கணிசமான எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இதன் காரணமாக தான் கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளை வரும் அக்டோபர் 21-ம் தேதியன்று அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் அழைத்து கலந்துரையாட உள்ளார்.
கொடிது கொடிது வறுமை கொடிது... உத்தரபிரதேசத்தில் 6 வயது மகளை கொன்ற தாய் கைது
திமுக பலவீனம்
கொங்கு மண்டலத்தை சேர்ந்த கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் கரூர் மற்றும் நீலகிரியை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் திமுக சற்று பலவீனமாக உள்ளது. இந்த பலவீனம் இன்றோ, நேற்றோ ஏறட்டதில்லை. கருணாநிதி காலம் தொட்டே இந்த நிலை தான். கடந்த முறை திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு காரணமே இந்த கொங்கு மண்டலம் தான்.
கூடுதல் கவனம்
இதனால் இந்த முறை அதீத கவனத்துடன் கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார் ஸ்டாலின். திமுகவில் உட்கட்சிப் பிரச்சனைகள் அதிகம் இருப்பது இந்தப் பகுதியில் தான். இதனால் இதில் கே.என்.நேரு தலையிட்டு பேசுவதைக் காட்டிலும் தாமே நேரடியாக பேசினால் நிர்வாகிகளுக்கு உற்சாகமும், நம்பிக்கையும் வரும் என்பதால் தான் இந்த சந்திப்புக்கான தேதியை ஒதுக்கியுள்ளார் ஸ்டாலின்.
தேர்தல் பணி
திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொங்கு மண்டல பொறுப்புதாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் முடிவுகள் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. இதனால் இந்த முறை அதில் சிறிய மாற்றம் செய்து தனி நபரை நியமிக்காமல் எம்.பி.க்கள் கொண்ட ஒரு குழுவை ஸ்டாலின் நியமிக்க இருக்கிறார் . அதில் ஆ.ராசா, பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம், சேலம் எம்.பி. பார்த்திபன், மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எடப்பாடி தொகுதி
மேலும்,ஒரு எம்.பி.க்கு இரண்டு மாவட்டங்கள் என பொறுப்பு பிரித்துக் கொடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே கொங்கு மண்டல திமுக முகங்களாக திகழும் பொங்கலூர் பழனிசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், ஈரோடு முத்துசாமி, கரூர் செந்தில்பாலாஜி, நாமக்கல் ராஜேஷ்குமார் போன்றோர் கடந்த 6 மாதங்களாகவே நிவாரண உதவிகள் மூலம் தேர்தல் பணிகளை முன்னெடுத்து விட்டனர். இதனிடையே எடப்பாடி தொகுதியில் முதலமைச்சரை எதிர்த்து வீரபாண்டி ராஜா அல்லது செல்வகணபதி ஆகியோரில் ஒருவரை திமுக நிறுத்தும் எனத் தெரிகிறது.