கருணாநிதியின் உழைப்பு + ஜெ. ஸ்டைலில் கெத்து.. இரண்டும் கலந்து கலக்கும் மு.க.ஸ்டாலின்
ஜெயலலிதா, கருணாநிதி பாணியில் பிரச்சாரம் செய்து வருகிறார் முக ஸ்டாலின்.
Recommended Video
சென்னை: கருணாநிதி ஸ்டைலில் கொஞ்சம் உழைப்பு, ஜெ. ஸ்டைலில் கொஞ்சம் கெத்து என இரண்டையும் கலந்து பொளந்து கட்டி வருகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின்!
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், கருணாநிதி மறைந்தபிறகு ஆஹா ஓஹோவென்று கட்சியை ஸ்டாலின் கொண்டு போய்விடவில்லை.
அதிரடிகள் இல்லாதது, கூட்டணியில் சறுக்கல்கள், சீட்டுகளில் முரண்பாடு, வைகோ, திருமா போன்ற தலைவர்களுடன் சீட் பேரத்தின்போது ஏற்பட்ட மனஸ்தாபங்கள், தலைதூக்கி வரும் ரவுடிகளின் அராஜகங்கள், போன்ற பல காரணங்கள் இந்த ஒரு வருடத்தில் மட்டும் ஸ்டாலினுக்கு சறுக்கலைதான் தந்தது.
ஆமா நான் அப்படித்தான்.. ஆனால் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு கிடையாது.. தமிழிசையின் செருப்படி பதில்
வாக்கிங்-டாக்கிங்
இப்போது பிரச்சார யுக்தி என்று பார்த்தால் இதில் சற்று மாறுபடுகிறார் ஸ்டாலின். வழக்கமாகவே அதிகாலையில் எழுந்து வாக்கிங் போகும் பழக்கம் உடைய ஸ்டாலின், அதையே இப்போது பிரச்சாரத்திலும் பயன்படுத்தி கொள்கிறார். கருணாநிதி போலவே காலை முதல் இரவு வரை எந்நேரம் ஆனாலும் பிரச்சாரத்திற்கு தன்னை தயார்படுத்தி கொள்கிறார்.
அன்பு முத்தங்கள்
வேட்பாளர்களிடம் அனுசரனையாக பேசி தொகுதி நிலவரங்களை கட்டாயம் கேட்டறிகிறார். நடுநடுவே தொண்டர்களுக்கு அசராமல் செல்பி எடுக்க அனுமதிக்கிறார். குறிப்பாக நடந்து சென்றுவாக்கு சேகரிக்கும்போது குழந்தைகள் ஓடிவந்து ஸ்டாலினிடம் ஒட்டிக் கொள்வதும், பாட்டிகள் ஸ்டாலின் கன்னத்தை பிடித்து கிள்ளுவது கூடுதல் பிளஸ்!
அதிரடி பேச்சு
கருணாநிதி அளவுக்கு பேச்சில் சுவாரஸ்யம் இல்லைதான். ஆனாலும் கருணாநிதி போல புள்ளிவிவரங்களை (எழுதி வைத்துப் பேசினாலும்) அடுக்கிக் கொண்டே போகிறார். நீண்ட நேரம் பேசுகிறார். கருணாநிதியை விட காட்டமாகவே பேசுகிறார். அதிரடியாக பேசுகிறார். கருணாநிதியின் பேச்சைப் பார்த்து எதிர்த் தரப்பு பயப்படும் என்றால் ஸ்டாலின் பேச்சில் வீசும் அனல் எதிர் தரப்பினரை அலற வைப்பதாக உள்ளது.
சவால்கள்
வேன் பிரச்சாரம் இவருக்கு குறைவுதான். அதனால் ஜெ.பாணியில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதனால் பொதுக்கூட்டத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது பேசுகிறார். முன்பு ஸ்டாலின் பேச்சில் ஒரு மென்மைதன்மை இருக்கும். இப்போது கொஞ்சம் காரம் கூடியுள்ளது. ஜெயலலிதா விடும் சவால்களை போலவே ஸ்டாலினும் அதற்கு சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கிறார்.
கவிதை கொட்டுகிறது
சில சமயம், எடக்கு மடக்காக பேசுகிறார். முதல்வரை வாரு வாரு என்று வாருகின்றார். திடீரென கவிதை சொல்கிறார். திடீரென சிலேடையில் திட்டுகிறார். திடீரென ஓபிஎஸ், ஈபிஎஸ் போல மிமிக்ரி செய்கிறார். ஆனால் உண்மையை சொல்ல போனால் ஸ்டாலின் பேச்சு மக்களை கட்டி போட்டு உட்கார வைப்பதில்லை. அரைச்ச மாவையே அரைப்பது போல உள்ளது. கிராம சபை கூட்டங்களில் என்ன பேசினோரோ, அதேதான் இப்போதும் உள்ளது. அதனால் பிரச்சாரங்களில் அனல்தெறிப்பது என்பது குறைவுதான்!
உதயநிதி
இது எல்லாவற்றையும்விட, பெரியவங்க, சின்னவங்க என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாமல் பிரச்சாரம் செய்து வரும் உதயநிதியை கூப்பிட்டு ஸ்டாலின் கொஞ்சம் கண்டித்தால் நல்லா இருக்குமே என்றும் சொல்ல தோன்றுகிறது!