காலில் செருப்பு கூட இல்லை.. வெறுங்காலில் சகதியில் இறங்கிய மு.க.ஸ்டாலின்.. மிரண்டு பார்க்கும் அதிமுக?
சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை அடுத்தடுத்து எடுத்து வருகிறது திமுக
சென்னை: காலில் செருப்பு கூட இல்லை.. அப்படியே வெறுங்காலில் விவசாய நிலத்தில், அதுவும் சகதி நிறைந்த வயலில் வேட்டியை மடித்து கொண்டு ஸ்டாலின் இறங்கியதும், அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் பேசியதும் மிகப்பெரிய விவாதத்தை சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகிறது.
வழக்கமாக ஸ்டாலினை வெள்ளை வேட்டி சட்டை தவிர, டி-ஷர்ட்களில் பார்த்திருப்போம்.. ஜாக்கிங் டிரஸ்களில் பார்த்திருப்போம்.. ஆனால், ஆனால் பச்சை கலர் துண்டு, அதற்கு மேட்சாக பச்சை கலர் மாஸ்க் அணிந்து , இன்றுதான் பார்க்கிறோம்..
வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இவ்வாறு பங்கேற்றார்.. அதற்கு முன்னதாக, அங்கு விவசாய நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்கள், தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார்... இப்படி நடந்து செல்லும்போது காலில் செருப்புகூட ஸ்டாலின் அணியவில்லை.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு: களத்துமேடு மரத்தடியில் மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!
திடீர் மாற்றம்
ஸ்டாலினின் இந்த திடீர் மாற்றம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவருகிறது.. அதேசமயம் திமுகவினர் இந்த மாற்றத்தை வரவேற்று கொண்டாடியும் வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே தன்னை ஒரு விவசாயி என்று சொல்லி கொள்ளும் எடப்பாடியார், தற்போது வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லி வருகிறார்.. அத்துடன், "ஸ்டாலின் என்ன விவசாயி? விவசாயத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும்" என்ற கேள்விகளை முன் வைத்தபடியே இருந்தார்.
நமக்கு நாமே
இதை உடைக்கவே ஸ்டாலின் இந்த முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது.. ஆனால், ஒவ்வொரு முறை மக்களை அணுகும்போதும், ஸ்டாலினின் எளிமை பெரிதாக பேசப்படும்.. டீ கடைகளில் டீ குடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஜாக்கிங் போகும்போது பொதுமக்களிடம் பேசுவது, பிரச்சாரத்தின்போது நடைபாதை வியாபாரிகளிடம் நலன் விசாரிப்பது, குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, பாட்டிகளை அரவணைப்பது போன்ற அணுகுமுறைகள் வெளிப்படும்.. இது அத்தனையும் மக்களை கவரவே செய்தன.
பிரச்சாரம்
ஆனால், இதையும் எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தன.. பிரச்சாரத்திற்காகவே வெகுஜன மக்களை கவர இப்படியெல்லாம் ஸ்டாலின் செய்வதாக கூறின.. கரூரில் கரும்பு தோட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்க ஒருமுறை சென்றபோதும், அந்த வயலில் முன்னதாகவே சிமெண்ட் போட்டு வைத்திருந்தனர். வயலில் இறங்கி சாதாரணமாக செல்லாமல், வெளியில் சிமெண்ட் ரோட்டில் ஸ்டாலின் செல்கிறாரே? இவருக்கு விவசாயிகள் பிரச்சனை எப்படி புரிய போகிறது? என்றனர்.
காஞ்சிபுரம்
அதேபோல, கிராம சபை கூட்டங்கள் நடந்த சமயத்திலும், சிவப்பு கம்பளங்களை சில இடங்களில் விரித்து வைத்திருந்ததையும் விமர்சித்தனர். இப்படி எத்தனையோ குறைகளை கண்டுபிடித்து அதை சோஷியல் மீடியாவில் விவகாரமாக்கினவர்கள், இன்று காஞ்சிபுரத்தில் ஸ்டாலினை கண்டதுமே வாயடைத்து போய்விட்டனர்... அதுவும் சிமெண்ட் தரை எதுவுமே அங்கு போடப்படவில்லை.. வெறும் தரையில், சகதியில்தான் நடந்து சென்றுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
நடக்க போகும் தேர்தலில் இன்னும் மாறுபட்ட கோணத்தில், மாறுபட்ட ஸ்டாலினை பார்ப்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது.. அதுமட்டுமில்லை... பிரசாந்த் கிஷோரின் அதிரடிகளில் ஒன்றுதான் இது என்றும் சொல்லப்படுகிறது.. எடப்பாடியாருக்கு சுனில் தரப்பு பின்னணியில் இருப்பதால்தான், அடிக்கடி அவரது போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ட்வீட்
முதல்வரின் ட்விட்டர் பக்கமும் எந்நேரமும் பிஸியாகவே இருக்கிறது.. கொரோனா சமயத்திலும், மக்களின் பிரச்சனைகளுக்கு செவிசாய்த்தபடியே இருந்தார்.. சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து கொண்டே இருந்தார்.. ஒருபக்கம் விவசாயி முதல்வர், இன்னொரு பக்கம் ட்விட்டரில் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்கும் ஹைடெக் முதல்வர் என்று மக்களை எந்நேரமும் அணுகியே வருகிறார் என்ற பெயரை கொரோனா நெருக்கடியிலும் எடப்பாடியார் பெற்றிருந்தார்.
திமுக
இந்த பாணியில் ஹைடெக் வழியில் திமுக என்றோ களமிறங்கிவிட்டாலும், மிச்சமிருக்கும் விவசாய பாணியை இன்று முதல் கையில் எடுத்துள்ளது.. ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வருவதுடன், இன்று அவர்களுக்காகவே போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளதால், மொத்த விவசாயிகளின் பார்வையும் திமுக பக்கம் திரும்பி உள்ளது.. இதில், பச்சை துண்டு, பச்சை மாஸ்க்கும் சேர்ந்து கொண்டதால், விவசாயிகளின் பச்சை சிக்னல் அதிகமாக விழுந்து வருகிறது.