சீன அதிபருடன் பாதுகாவலர்கள் வந்ததற்கு இதுவா காரணம்? ஸ்டாலின் பேச்சு.. நெட்டிசன்கள் அதிர்ச்சி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் சீன அதிபர் பாதுகாப்பு தொடர்பாக கூறிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பொன்னாக்குடி கிராமப்புற பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதுதான் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
ஸ்டாலின் அப்படி என்ன பேசினார் என்கிறீர்களா? இதோ அந்த விவரம்.
சீன அதிபர் வருகை
ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இதற்கு உதாரணமாக, சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இருவரும் மாமல்லபுரத்தில் தமிழகத்தில் வெற்றிகரமாக சந்தித்ததை தெரிவிக்கிறார். மாமல்லபுரத்தில், வெட்ட வெளிச்சத்தில், திறந்தவெளியில், கடற்கரையோரத்தில், மரத்தடியில் மீட்டிங் நடைபெற்றது. இதை வைத்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.
ஸ்டாலின் குற்றச்சாட்டு
இரண்டு நாட்டின் தலைவர்கள் வருகை தந்தால் கண்டிப்பாக பாதுகாப்பு அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் பாதுகாப்பை நம்பாமல்தான், சீனாவில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் குழு அந்த நாட்டு அதிபருடன் வருகை தந்தது. எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது, எத்தனை போலீசார் அவரை சுற்றி வந்தனர். போக்குவரத்தை ரத்து செய்துவிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலை ஏற்படுத்தி விட்டு கடலோரத்தில் ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு ஒரு கூட்டத்தை நடத்தி உள்ளீர்கள். பல மாநிலங்களில் இருந்தும் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். இதை சுதந்திரமாக நடைபெற்ற மீட்டிங் என்று சொல்லிவிட முடியுமா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
அமெரிக்கா நடைமுறை
சீன அதிபர் என்று கிடையாது, வேறு எந்த ஒரு நாட்டிலிருந்து தலைவர்கள் வேறு ஒரு நாட்டுக்கு பிரயாணம் செய்தாலும் தங்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளை உடன் அழைத்துச் செல்வார்கள். அதுவும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு, பாதுகாப்பு அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் சென்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, தொடர்பாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன், தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வது வழக்கம்.
காரணம் என்ன
நீண்டகாலமாகவே இதுதான் நடைமுறையாக இருக்கும் நிலையில், சீன அதிபருடன் பாதுகாவலர்கள் வந்தது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்காகத்தான் என்று ஸ்டாலின் பேசியுள்ளது அறியாமையினாலா, அல்லது மக்கள் இதை நம்புவார்கள் என்று நினைத்து பேசி விட்டாரா, என்பதே தெரியவில்லை என இணையதளத்தில் பொதுமக்கள் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருவதை பார்க்க முடிகிறது.