பூண்டி கலைவாணன் தேர்வு.. திமுகவின் மாஸ்டர் பிளான்.. அதிர வைத்த ஸ்டாலின்!
குடும்பத்தை ஒதுக்கிவிட்டு கட்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இதுக்கே ஒரு சபாஷ் போடலாம்!
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனமும், சிந்தனையும் திமுகவுக்குத்தான் போனது. திமுகவின் கோட்டை திருவாரூர் என கருதப்பட்டு வருகிறது. மேலும் சொந்த தொகுதி என்பதால் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இதற்காக கனிமொழி, செல்வி, உதயநிதி என்ற பெயர்கள் அடிபட்டன. வேர் ஊன்றிய தொகுதி என்பதாலும், கருணாநிதி குடும்பத்தினர் உரிமையாக நிற்க கூடிய ஒரே தொகுதி என்பதாலும், கருணாநிதி மரணத்தினால் அனுதாப வாக்குகள் பெற முடியும் என்பதாலும் இத்தனை குடும்ப உறுப்பினர்கள் பெயர் அடிபட்டன.
'தில்'லான முடிவு
ஆனால் கட்சி சார்பாக வேட்பாளரை அறிவித்து ஸ்டாலின் தில்லான முடிவை எடுத்துள்ளார். இந்த விஷயத்தில் குடும்பத்தை தள்ளி வைத்து தெளிவான முடிவை எடுத்துள்ளார். ஸ்டாலின் நினைத்திருந்தால், குடும்பத்தில் யாரை வேண்டுமானாலும் இங்கு நிறுத்தியிருக்கலாம். கனிமொழி, செல்வி இவர்களை வேட்பாளர்களாக அறிவித்தால், அந்த தொகுதியை பொறுத்தவரை இவர்கள் கருணாநிதியின் உறவாகத்தான் பார்க்கப்படும். உதயநிதிக்கோ அனுபவமும் இல்லை, தொகுதியை அறிந்தவரும் இல்லை.
மக்களை அறிந்தவர்
எனவே திருவாரூரில் வலுவான வேட்பாளர் யார் என்பதைதான் ஸ்டாலின் யோசித்திருக்கிறார். அதையும் தாண்டி அனுபவமிக்க வேட்பாளர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்காக தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி அவரது தொகுதியை முற்றும் அறிந்தவர்தான் இந்த பூண்டி கலைவாணன்.
கருணாநிதி இடத்தில்...
கருணாநிதி அந்த தொகுதியில் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அடிப்படை காரணம் பூண்டி கலைவாணன் என்றும் பலமுறை வெளிப்படையாகவே பேசப்பட்டது. அதைதவிர கருணாநிதியின் குடும்பத்தின் மீது பூண்டி கலைவாணனுக்கு உள்ள விசுவாசத்திற்கு ஸ்டாலின் மதிப்பளித்து இருக்கிறார். அதனால்தான் கருணாநிதி இடத்தில் கலைவாணனை வைத்து அழகு பார்க்கும் முடிவை எடுத்திருக்கிறார்.
பாராட்டத்தக்கது
ஒருவேளை குடும்ப உறுப்பினரை யாராவது ஸ்டாலின் அறிவித்திருந்தால், அது சரியான முடிவாக இருந்திருக்காது. சொந்த தொகுதியே என்றாலும் குடும்பத்தை தூக்கி ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, விவரமும், அனுபவமும் உள்ள ஒருவரை வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!!
கள்ளர் சமூகம்
அது மட்டும் இல்லை... டிடிவிதினகரன் ஏற்கனவே நிறைய பேட்டிகளில், "ஆர்.கே.நகரில் ஜெயிச்ச எங்களுக்கு எங்கள் சொந்த மாவட்டத்தில் ஜெயிக்க தெரியாதா?" என்று மார்தட்டி சொன்னதற்கு காரணமே, வேட்பாளர் எஸ்.காமராஜ் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வாக்குகளை எளிதாக பெறுவார் என்பதால்தான்.
மாஸ்டர் பிளான்
தினகரனின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கவே அதே சமூகத்தை சேர்ந்த பூண்டி கலைவாணனை ஸ்டாலின் அறிவித்து தனது மாஸ்டர் பிளானை காட்டியுள்ளார். தொகுதியில் ஒருவேளை திமுக வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்தால் அதற்கு ஸ்டாலினின் "சாய்ஸ் செலக்ஷன்"தான் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.