தமிழக பட்ஜெட் 2019: உதவாக்கரை பட்ஜெட்.. 'சங்கீத வித்வான்' ஓபிஎஸ்.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்
Recommended Video
சென்னை: தமிழக அரசின் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் என்றும், சங்கீத வித்வான் போல துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதை வாசித்தார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பிறகு சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நிதி மேலாண்மை படுதோல்வியை அடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. 110 விதியின்கீழ் எப்படி அறிவிப்பு வெளியாகி வருகிறதோ அதுபோல, ஏட்டுச் சுரைக்காயாக இந்த பட்ஜெட் உள்ளது.
உதவாக்கரை பட்ஜெட் இது. சங்கீத வித்வான் போல துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை வாசித்தார். பொருளாதாரத்தில் ஒரு மாபெரும் தோல்வியை இந்த அரசு அடைந்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால்தான், மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. கொட நாட்டில் எப்படி கொள்ளையடித்தனரோ, அதுபோல கொள்ளையடிக்கும் வகையில்தான் இந்த பட்ஜெட் உள்ளது.