ராமதாஸ் யாரைதான் நம்புவார்? அவருக்கு இது அழகல்ல.. ஸ்டாலின் அறிக்கை
டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: "ராமதாஸ் யாரைதான் நம்புவார்? உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கி வருகிறார்.. முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல; உரிய செயலும் அல்ல" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சித்துள்ளார்.
பொன்பரப்பி சம்பவம் குறித்து, விசிக சார்பில் சென்னையில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. அதில், பேராயர் எஸ்ரா சற்குணம் கலந்து கொண்டு வன்னியர்களை சரமாரியாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. அதேபோல முத்தரசனும் கலவரம் தொடர்பாக தன் கருத்தை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், எஸ்ரா சற்குணத்தையும், முத்தரசனையும் கடுமையாக விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, "எஸ்ரா சற்குணம், வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். கிழட்டு சிறுத்தையான தாம் சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது என்று வன்னியர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கவை" என்று காட்டமாக கூறியிருந்தார்.
இன்று காற்று செமையாக வீசும்.. மழை இங்கெல்லாம் பெய்யும்.. பாலச்சந்திரன் அறிவிப்பு
|
கோரிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக திருமாவளவன், உள்ளிட்டவர்கள் ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், எஸ்ரா சற்குணம், முத்தரசனுக்கு அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் முக ஸ்டாலினும் ராமதாசுக்கு கண்டன ட்வீட் போட்டுள்ளார். கூடவே ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
ஸ்டாலின் பதிவிட்ட ட்வீட்டில், "அய்யா மருத்துவர் திரு ராமதாஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தோழர் முத்தரசன் மற்றும் பேராயர் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவிற்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்க வேண்டாம்! அது தமிழ்ச் சமூகத்திற்கே பேராபத்தானது!" என்று பதிவிட்டுள்ளார்.
வருத்தம்
அதேபோல, முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டி" ஓர் அறிக்கை வெளியிட்டு பதற்றச் சூழ்நிலையை உருவாக்கியிருப்பதற்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பின்னடைவு
யார் மீதுதான் ராமதாசுக்கு நம்பிக்கை என்ற கேள்வியும் எழுகிறது. தம்மை அரசியலில் இன்னமும் நிலை நிறுத்திக்கொள்ள ஆக்கப்பூர்வமான பல வழிமுறைகள் இருக்கும்போது, ராமதாஸ் பின்னடைவை ஏற்படுத்தும் வழியை ஏன் தேர்வு செய்கிறார் என்று அவர் மீது அன்பும் அக்கறையும் உள்ள பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
அழகல்ல
அவரே ஒரு கற்பனைப் பேச்சை மனதில் செயற்கையாகக் கற்பித்து உருவாக்கிக் கொண்டு - அதற்கு பதில் என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு - இந்த இரு தலைவர்கள் மீதும் வன்முறையை வீசும் தொலைபேசி மிரட்டல்களுக்குக் காரணமாக இருப்பது பொறுப்புள்ள முதிர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு அழகல்ல; உரிய செயலும் அல்ல!
பதற்ற சூழல்
அமைதியாக நல்லிணக்கத்துடன் வாழும் சமுதாயங்களிடையே வெறுப்பைக் கக்கி, முத்தரசன் மற்றும் பேராயர் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குவது நமது தமிழ்ச் சமூகத்திற்குப் பேராபத்தானது.
வேண்டுகோள்
எல்லாவற்றையும் அறிந்திருப்பவர் அவர். அவருக்கு இது நிச்சயமாக அறிவுரை அல்ல; மனப்பூர்வமான வேண்டுகோள். இரா.முத்தரசன் மற்றும் பேராயருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்புகளை வழங்கி மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் உறுதியோடு பாதுகாத்திட வேண்டும்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.