"குப்பை கொட்ட கூட லாயக்கில்லாத அரசு" என்பதை மாற்றுங்கள்.. அரசுக்கு மு.க. ஸ்டாலின் காட்டமான அறிக்கை!
மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: மருத்துவக் கழிவுகளை கையாளவும், அழிக்கவும் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையுமில்லை... "குப்பை கொட்டவும் லாயக்கில்லாத அரசு" என்ற குற்றச்சாட்டையாவது மாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்' என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் காட்டமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகமாகி வருகிறது.. தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதாலும், தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியவும் ஏராளமான டெஸ்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் அந்த டெஸ்ட் செய்யப்பட்ட மருத்துவ கழிவுகளை குப்பை வண்டியில் ஏற்றி சென்று, சென்னையின் பல இடங்களில் குழி தோண்டி புதைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனாலேயே தொற்று திரும்பவும் சென்னை வாசிகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.. அது சம்பந்தமாக அறிக்கை இதுதான்:
"தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட சுயப் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், கொரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஆர்.டி.பி.சி.ஆர். கிட் உள்ளிட்டவை மருத்துவக் கழிவுகளாக மாறியுள்ளன.
இவற்றைக் கண்காணித்து, உரிய முன்னெச்சரிக்கை முறைகளைக் கையாண்டு, அப்புறப்படுத்தி, அவற்றை அழித்து, நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வேண்டிய முக்கியமான பணி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உரியது. வாரியம் சார்பில் 11 நிறுவனங்கள் 'அவுட் சோர்ஸ்' முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் 3 மட்டுமே முறையான நிறுவனங்கள் என்றும், எஞ்சியவை ஆளுங்கட்சியினரின் பினாமி நிறுவனங்கள் என்றும் அறியப்படும் நிலையில், இதுநாள்வரை கொரோனா மருத்துவக் கழிவுகளை அகற்றுவது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
2ம் உலகப் போரில் உயிர் தப்பிய... ஹிட்லர் வளர்த்த செல்ல 'முதலை' மரணம்!
நோய்த் தொற்று அபாயம் உள்ள மருத்துவக் கழிவுகளை, முறையாக மூடப்பட்ட குப்பை வண்டிகளில் எடுத்துச் சென்று, பாதுகாப்பாகவும் - உரிய முறையிலும் மின்சாரம் மூலம் பாதுகாப்பாக எரிக்க வேண்டும். ஆனால், மூடப்படாத குப்பை வண்டிகளில் கழிவுகளை அப்படியே அள்ளிப்போட்டு, சென்னையைச் சுற்றியுள்ள வழக்கமான குப்பை கொட்டும் இடங்களில் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்தான செயல் நடைபெறுகிறது.
திறந்த நிலையில் அள்ளிச் செல்லும்போது, சிவப்பு மண்டலமான சென்னையில் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு அதுவே காரணமாக அமைந்துவிடும். தூய்மைப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறி, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி, தூய்மைப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடுகளால் அனைத்துத் தரப்பினரும் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துள்ளனர்.
'குப்பை கொட்டக்கூட லாயக்கில்லாத அரசு' என்ற குற்றச்சாட்டையாவது குறைந்தபட்சம் மாற்றி பாதுகாப்பான முறையில் எச்சரிக்கையாகக் குப்பைகளை அகற்றவும், ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடவும் உடனடியாக ஆவண செய்திட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.