எடப்பாடி அரசிடம் தண்ணீருக்கு மட்டுமல்ல இது எல்லாத்துக்குமே பஞ்சம் தான்.. ஸ்டாலின் பட்டியல்
Recommended Video
சென்னை: குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு உடனே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர் தண்ணீர் தண்ணீர் எங்கே என மக்கள் தவிப்பதாகவும், ஆட்சியாளர்கள் குடிநீர் பிரச்னை குறித்து கவலைப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, உள்ளிட்ட ஏரிகள் வறண்டு போய்விட்டன.
இதனால் தலைநகரான சென்னையில் மிகமோசமான அளவில் தண்ணீர் பஞ்சம் காணப்படுகிறது. மக்கள் குடிநீர் உள்பட அத்தியாவசிய தேவைகளை கூட தண்ணீர் இல்லாததால் நிறைவேற்றுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
உணவகங்கள், நிறுவனங்கள்
சென்னையில் மக்கள் மட்டுமல்ல, உணவங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள். கடைகள், விடுதிகள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகின்றன.
அரசு சமாளிக்க முயற்சி
இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதவிர வீராணம் ஏரி, கல்குவாரி தண்ணீர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விவசாய கிணறுகளில் உள்ள தண்ணீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றின் மூலம் சென்னையின் தண்ணீர் தேவையை அரசு சமாளிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் தண்ணீர் பஞ்சம் தீரவில்லை.
முக ஸ்டாலின் பங்கேற்பு
இதையடுத்து தண்ணீர் பஞ்சத்தை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இன்று காலை திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ அன்பழகன் எம்எல்ஏ, மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன் உள்பட திமுகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றார்கள். இதேபோல் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.
ஸ்டாலின் பேச்சு
அப்போது திமுக தலைவர் ஸடாலின் பேசுகையில், சிலோனில் இருந்து ஒரு கதாநாயகன் தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த போது அய்யா பிச்சை போடுங்க, பிச்சை போடுங்க என கையேந்தி நின்றார்கள். அவர் அப்போது தமிழ்நாட்டின் வரவேற்பு சிறப்பாக இருக்கிறது. அதுபோல் தான் மக்கள் தண்ணீர் எங்கே, தண்ணீர் எங்கே என்று தவித்து வருகிறார்கள். இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் இந்த குரல் கோட்டையில் முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறதா? இல்லை. ஆகவே கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடத்தியுள்ளது.
ஸ்டாலின் தாக்கு
இந்த மேற்கு மாவட்டம் மட்டுமல்ல, சென்னை மாநகரம் முழுவதும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அரசிடம் நிதிக்கு பஞ்சம்இருக்கிறது. திட்டங்களுக்கும் பஞ்சம் இருக்கிறது. தொழிற்சாலை மற்றும் வேலை வாய்ப்புக்கும் பஞ்சம் இருந்து கொண்டிருக்கிறது. நீதிக்கும், நேர்மைக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.தண்ணீர் பஞ்சம் இல்லையென கூறிவிட்டு பள்ளிகளையும் ஓட்டல்களையும் மூடக்கூடாது என்கிறார் அமைச்சர். ஆட்சியாளர் தண்ணீர் பஞ்சம் பற்றி கவலைப்படாததால் மக்கள் காலிக்குடங்களுடன் போராட வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.