மண் மேடு.. பெட்ஷீட்.. சம்மணம் போட்டு உட்கார்ந்து.. புது ஃபார்மில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!
மகாத்மா காந்தியின் யுக்தியை மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: மண் மேடு.. பெட்ஷீட்.. சகிதம் சம்மணம் போட்டு உட்கார்ந்து.. புது ஃபார்மில் இறங்கிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்!!
காந்தி முதல் கக்கன்வரை இன்றும் நாம் பேசப்பட்டு வருவதற்க காரணம் அவர்களின் எளிமைதான். அரசியலையும் தாண்டி அனைவர் மனதிலும் நச்சென ஒட்டிக் கொண்டதற்கு காரணம் வெகு ஜன மக்களுடன் அவர்கள் கலந்ததுதான்.
இதை எம்ஜிஆர் இறுதி வரை சிறப்பாகவே கையாண்டார். கடைசிவரை பொதுமக்களுடன் ஒன்றிணைந்து இருந்ததை யாராலும் பிரிக்க முடியவில்லை... மக்களை தன்னிடமிருந்து பிரிக்காதவாறும் கடைசிவரை இருந்தார் எம்ஜிஆர் ஆனால் எம்ஜிஆருக்கு பிறகு மக்களோடு மக்களாக கலப்பவர்கள் வெகுசிலரே என்ற நிலைமைதான் ஏற்பட்டது.
சப்பாத்தி
தேர்தல் சமயங்களில் கட்சி பாகுபாடு இன்றி எல்லோருமே மக்களை தேடி குறிப்பாக கிராமங்களை தேடி ஓடுகிறார்கள். ராகுல்காந்திகூட ஒரு குடிசை வீட்டில் சப்பாத்தி சாப்பிட்டார், ரோட்டோர கடையில் டீ குடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.
அன்புமணி என்னும் நான்
அதேபோல, ஸ்டாலினின் "நமக்கு நாமே", அன்புமணியின் "அன்புமணி என்னும் நான்" போன்றவைகள் நடத்தியபோதுகூட இவர்களின் எளிமை, பேச்சு, செயல்பாடுகள் மக்களை கவர்ந்தன. அதனால்தான் அவை வெற்றி பெற்றதுடன், வாக்கு வங்கி அதிகரிக்கவும் இவர்கள் இருவருக்கும் காரணமாக இருந்தது.
மணல்மேடு
இப்போது ஸ்டாலின் திரும்பவும் இதே ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி கிராமங்களை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்திருக்கிறார். முதல் நாள் கூட்டம் இன்று தொடங்கி உள்ளது. மணல்மேடு போன்ற ஒரு திண்ணை அமைக்கப்பட்டிருக்கிறது.
செருப்பு இல்லை
அதன்மேல் ஒரு சாதாரண ஜமுக்காளம் விரிக்கப்பட்டுள்ளது. பின்னால் பேனர் கட்ட கூட இடம் இல்லாமல், இரண்டு பக்கமும் உள்ள மரத்தில் கட்டி அதை தொங்கவிட்டிருக்கிறார்கள். செருப்பு இல்லாமல் அந்த மண்மேட்டில் ஏறி சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கிறார் ஸ்டாலின்.
எப்பவும் தேவை
கையில் குறிப்புக்காக ஒரு பேப்பர் வைத்திருக்கிறார்... அவரை சுற்றி வேறு யாரும் கூட இல்லை.. தனி ஒருவராக மண் மேட்டில் உட்கார்ந்து கொண்டு கிராம மக்களிடம் பேசுகிறார். இதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு எப்பவுமே இதே எளிமையோடு ஸ்டாலின் மக்களோடு நெருங்கி இருக்க மாட்டாரா என்றும் மற்ற தலைவர்களும் இப்படி இருக்கலாமே என்றும் ஒரு இனம்புரியாத எதிர்பார்ப்பு வந்துபோகிறது.