சாதி வன்மத்தை எதிர்க்கும் துணிச்சல்காரன் அசுரன்.. வெற்றிமாறன், தனுஷுக்கு ஸ்டாலின் பாராட்டு
தூத்துக்குடியில் அசுரன் படம் பார்த்து மகிழ்ந்தார் முக ஸ்டாலின்
சென்னை: "பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் -சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் இந்த அசுரன்... கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன் படத்துக்கு புகழாரம் தெரிவித்துள்ளார்.
அசுரன் படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது... கிராமப்புற பண்ணையாருக்கும், வேலையாளுக்கும் இருக்கும் தொடர்பு எந்த மாதிரியாக உள்ளது என்பதை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் படம் அசுரன்.
இடைநிலை சமூகங்களுக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் இடையே நடக்கும் நெருடலான உறவுமுறையை அநாயசமாக உடைத்தெறிந்து எரிந்து அப்பட்டமாக இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன்.
தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படத்துக்கு அபார பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. நிலம், சாதி, வர்க்க படிநிலைகளை இந்த சமூகத்துக்கு எடுத்து காட்டுவது போல இந்த படம் இருப்பதுதான் இதன் சிறப்பு.
அதனால்தான் திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்த படத்தை விரும்பி பார்த்துள்ளார். ஒரு அரசியல் தலைவர் சினிமா பார்ப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் சூடு கொஞ்சமும் தணியாத நிலையில், நாங்குநேரி தெருக்களின் திண்ணை பிரச்சார விறுவிறுப்பு சூழலிலும் இந்த படத்தை ஸ்டாலின் பார்த்துள்ளது, அதன் அவசியத்தையும், படத்தின் முக்கியத்துவத்தையுமே வெளிப்படுத்துகிறது.
நேற்று இரவு தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா தியேட்டரில் பின் சீட்டில் ஸ்டாலின் உட்கார்ந்திருக்க.. அருகருகே மாவட்டத்தின் மற்ற தலைவர்களும் அமர்ந்து படத்தை ரசித்து பார்த்தனர். படத்தின் பாதிப்பு ஸ்டாலினுக்கு நிறைய இருந்திருக்கிறது போலும்.. இன்று காலையில் இது சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
#Asuran - படம் மட்டுமல்ல பாடம்!
— M.K.Stalin (@mkstalin) October 17, 2019
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV
அதில், "சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள்" என்று இருவரையும் உச்சிமுகர்ந்துள்ளார்.
வழக்கமான ஃபார்மாலிட்டிக்கான எந்தவித வணிகக்கூறுகளும் இல்லாமல், கற்பிதங்களை சுக்குநூறாக்கிவிட்டு வெளிவந்துள்ள அசுரனுக்கு.. ஸ்டாலினின் இந்த பாராட்டு மெச்சத்தக்கதே!