எதிர்க்கட்சியாக இருந்தாலும் இடைத் தேர்தலில் ஜெயிச்சிருக்கோம்.. இது பெரிய விஷயம்.. பொன்முடி பூரிப்பு
சென்னை: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சியின் கூட்டணி, வேலூரில் தோற்றுள்ளது, திமுகவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான பொன்முடி தெரிவித்துள்ளார்.
வேலூர் தேர்தல் முடிவு குறித்து பொன்முடி கூறியதாவது: வேலூரில் நடைபெற்றது இடைத் தேர்தல். பொதுத்தேர்தல் கிடையாது. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியின் பணபலம், அதிகார பலம் அதிகமாக பயன்படுத்தப்படும்.
பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தான் ஜெயிப்பார்கள். ஆனால், வேலூரிலோ, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக, அதன் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமோக வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத்தான் கருதுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுக நிர்வாகி செல்வராஜ் அளித்த பேட்டியில், பஞ்சாயத்து தேர்தலில் பெற்ற வெற்றியை போல மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, நடந்த பொதுத் தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுகவால், இப்போது அவ்வாறு ஒரு வெற்றியை பெறமுடியவில்லை. ஆளும் அதிமுக அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமாக இதை பார்க்கிறோம. இவ்வாறு அவர் தெரிவித்தார்.