ஊதுபத்தி கொளுத்தினா கூட சிபிஐ விசாரணை கேட்பீங்களா? ஸ்டாலினை காமெடியாக்கிய ஜெயக்குமார்
சென்னை:தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில், மீனவர்களுக்கு மானிய விலையிலான 27 இருசக்கர வாகனங்களை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அதைத் தொடர்ந்து, மீன்வளம் குறித்த 15 ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா கனவுகளை பிரதமர் நிறைவேற்றுவது நல்ல விஷயம் தான். அவ்வாறு கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து வரவேற்கத்தக்க ஒன்று.
சந்தர்ப்பவாதம் என்று சொன்னால் அது திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் தான் பொருந்தும். சென்னையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்துவிட்டு, கொல்கத்தாவில் ஸ்டாலின் பம்மி விட்டார். ஏன் பம்மினார்? இதுதான் அவரது இரட்டை வேடம்.
யாகம் வளர்ப்பதால் ஒருவர் முதல்வராக முடியுமா? ஒரு அலுவலகத்தில் ஊதுபத்தி அல்லது கற்பூரம் கொளுத்தினால் கூட அதற்கு பெயர் யாகம் வளர்ப்பதா? இதையெல்லாம் உடனே திரித்து சொல்கிறார்கள். எப்படி சிண்டு முடிந்தாலும், பிரிக்க முடியாத மாபெரும் இயக்கமாக அதிமுக உள்ளது.
யாகம் வளர்த்தால் ஒருவர் முதலமைச்சராகிவிட முடியுமா? எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்கும் அளவுக்கு ஸ்டாலின் சென்று விட்டார். கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு திமுக அடைக்கலம் கொடுப்பது அம்பலமாகிவிட்டது.
பத்திரிகையாளர் மேத்யூ, சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோருடன் திமுகவுக்கு உள்ள தொடர்பு குறித்து, விசாரணையில் தெரியவரும். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.
தற்போது கடுமையான நிதி பற்றாக்குறை இருந்தாலும், அதை சமாளித்து வருகிறோம். நிதி நிலை சீராகும் போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதிமுக கூட்டணிக்கு பல கட்சிகள் முன்வந்திருக்கின்றன. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்ததும், கூட்டணி, அறிக்கை என ஒவ்வொன்றுக்குமான குழு அமைக்கப்படும் என்று கூறினார்.