குடிநீர் பிரச்சனை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை... தமிழிசை
சென்னை: குடிநீர் பிரச்சனை குறித்து பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை செளந்தரராஜன் டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: பாஜகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவின் அரசியல் அனுபவம் பாஜகவிற்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், ஜே.பி.நட்டா அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநில தலைவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நானும் செல்கிறேன். அவருக்கு வாழ்த்து சொல்லவும், அவருடைய வழிகாட்டுதலின் படி நடக்கவும் செய்வோம். பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா வழிகாட்டுதல்ஜே.பி.நட்டாவுக்கு இருக்கும். அவருடைய அனுபவமும் பா.ஜ.க.விற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இஸ்ரேலில் உள்ளது போல் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறை படுத்த வேண்டும். புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தினார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது என்றும் பேசினார்.
முன்னதாக, ஆளும் கட்சியை குறை சொல்வதையே வேலையாக் கொண்டிருக்கும், திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த போது திட்டங்களை செயல்படுத்தவில்லை. தொலைநோக்கு திட்டத்துடன் காங்கிரஸ் - திமுக செயல்பட்டிருந்தாலே குடிநீர் பஞ்சம் வந்திருக்காது என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றினாலே போதும், குடிநீர் பஞ்சம் தீரும் என்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன் கூறினார்.