உதயநிதியை தொடர்ந்து கே.என்.நேரு.. காங்கிரசுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்?
Recommended Video
சென்னை: காங்கிரசை, திமுக ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜாக நினைக்கத் தொடங்கியுள்ளது. கூடிய விரைவில், அதை கழற்றிவிட திமுக தயாராகிவிட்டது.
நடைபெற்ற லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தேனி தொகுதியை மட்டும் இழந்து பிற தொகுதிகளை வென்றது காங்கிரஸ்.
உத்தர பிரதேசத்தில், மாயாவதியும், அகிலேஷும், காங்கிரசை சீண்டவில்லை. மமதா பானர்ஜியும் பக்கத்தில் சேர்க்கவில்லை. ஆனால், திமுக மட்டும், 10 தொகுதிகளை வாரி வழங்கியது, அப்போதே, கட்சிக்குள் முனுமுனுப்பை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர்
ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் பெரிய தேர்தல், தொடர்ந்து 2 முறை தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத தோல்வி, கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற பூஜ்யம் போன்றவை எல்லாம் சேர்ந்து, காங்கிரசை தங்கள் பக்கமே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை திமுக தலைமைக்கு கொடுத்தது. எனவே வேறு வழியின்றி, காங்கிரசுக்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்து ஆனந்தப்படுத்தியது திமுக. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூட ஸ்டாலின் சொன்னார்.
ராகுல் காந்தி தோல்வி
அகில இந்திய அளவிலான தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி வந்துவிட்டன. காங்கிரசால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பிடிக்க முடியவில்லை. அமேதி தொகுதியில், ராகுல் காந்தியே தோற்றுப்போனார். இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதால், திமுக மட்டும் ஏன் காங்கிரசை தூக்கி சுமக்க வேண்டும் என்ற மன நிலையில் திமுக தலைவர்கள் உள்ளனர்.
ஸ்டாலின் அலையாம்
சமீபத்தில் திருச்சியில் நடந்த, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், பேசிய, திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், உதயநிதி, திமுக பெற்ற வெற்றி, தமிழகத்தில், ஸ்டாலின் அலை வீசுவதை உறுதி செய்துள்ளது. எனவே, காங். எம்எல்ஏ, ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள நாங்குநேரி சட்டசபை தொகுதியை, திமுகவுக்கு வழங்க காங்கிரஸ் முன்வர வேண்டும் என்று குண்டு வீசினார்.
கே.என்.நேரு பேச்சு
இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான, கே.என்.நேரு, இன்று வெளியிட்ட கருத்து அணுகுண்டு ரகம். காங்கிரசை ஏன் பல்லக்கில் திமுக தூக்கி சுமக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களில் தனித்தே போட்டியிடலாமே என்று கூறியுள்ளார் நேரு. இவையெல்லாம், திமுக தலைமையின் ஆசை. ஆழம் பார்க்க இப்படியான இரண்டாம் கட்ட தலைவர்களை பேச வைக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.
திமுக முடிவு
மத்தியிலும், மாநிலத்திலும், திமுகவுக்கு இப்போது காங்கிரஸ் தயவு தேவையில்லை. ஆனால், லோக்சபாவிலும் சரி, தமிழகத்திலும், திமுக தயவுதான், காங்கிரசுக்கு தேவை. எனவே, காங்கிரசை, தலையில் தட்டி வைக்க இதுதான் தக்க நேரம் என திமுக தலைமை நினைக்கிறது. ஏற்கனவே, பாமகவை கழற்றிவிடும் திட்டத்தில் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தல், மீண்டும், திமுக vs அதிமுக என்ற நிலைக்குத்தான் தமிழக அரசியலை முன்நகர்த்தும் வாய்ப்பு உள்ளது.