மே.31-ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்கத் திட்டம்
சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், சந்திப்புகள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்தவாறே தினமும் காணொலி மூலம் நிர்வாகிகள் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கூட, மு.க.ஸ்டாலினே பங்கேற்று தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டார். இப்படி எல்லா கூட்டங்களும் காணொலி மூலமாக நடைபெற்று வரும் நிலையில், மே.31-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார் ஸ்டாலின்.
ஞயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் அரசு ஆகிய தலைப்புகளில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
யார் அரசியல் செய்வது...? நேருக்கு நேர் விவாதிக்க தயார்... அமைச்சர் காமராஜுக்கு கே.என்.நேரு சவால்
ஊரடங்கு காலத்தில் திமுக நடத்தும் இரண்டாவது அனைத்துக் கட்சி கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கு காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தால், காணொலி மூலம் நடைபெற்றது.
இப்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அன்றைய தினம் 5-ம் கட்ட ஊரடங்கு பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாகவும் திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.