தகுதி நீக்கத்திற்கு வைத்த செக்.. சபாநாயகருக்கு எதிராக திமுக மூவ்.. ஸ்டாலினின் ராஜதந்திர திட்டம்!
3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டு இருப்பதற்கு எதிராக திமுக கட்சி ராஜதந்திரமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
சென்னை: 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டு இருப்பதற்கு எதிராக திமுக கட்சி ராஜதந்திரமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அரசியலில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. எந்த சட்டத்தை வைத்து யார் ஆக்சனில்
இறங்குவார்கள் என்று கணிக்க முடியாது. அந்த வகையில் தற்போது திமுகவின் வழக்கறிஞர் குழு கொடுத்த ஆலோசனை ஒன்று அந்த கட்சிக்கு பெரிய பலன் அளித்துள்ளது.
அமமுகவிற்கு நெருக்கமாக இருக்கும் 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக திட்டமிட்டு வருகிறது. தேர்தல் முடிவை பொறுத்து இவர்களுக்கு எதிராக அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
தகுதி நீக்கம்
அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அக்கட்சி முடிவு செய்து இருக்கிறது. அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் முடியும் வரைதான் திமுகவுக்கு சாய்ஸ்.. மே 23க்கு பிறகு அதிமுக கை ஓங்கும்?.. பரபரக்கும் களம்
திமுக தலைவர்
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் என்பவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று குறிப்பிட்டார். அதன்படி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக திட்டமிட்டுள்ளது.
என்ன சட்டம்
திமுகவின் இந்த திட்டத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. 2016 ஜூலை மாதம் 16ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெ எஸ் கேஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் உள்ள போது அவர் அவையில் உள்ள எந்த எம்எல்ஏவையும் நீக்க முடியாது. கட்சியின் கொறடா கோரிக்கை வைத்தாலும் தகுதி நீக்க முடியாது, என்று ஆணையிட்டது.
இதுவரை நீக்க முடியாது
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இருந்தால், எல்லா எம்எல்ஏக்களும் வாக்களித்து, அதில் அவர் வெற்றிபெற்றால் மட்டுமே, அதன்பின்பே எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். சபாநாயகருக்கே பெரும்பான்மை இல்லை என்றால், அவரால் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அருணாசலப்பிரதேச சட்டசபையில் இதே போன்றதொரு வழக்கு வந்த போது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
திமுக திட்டம்
இந்த அரசியலமைப்பின் 10வது சட்டப்பிரிவுதான் தற்போது திமுகவிற்கு கைகொடுக்க உள்ளது. அதன்படி 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நினைத்தால் அவருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். அதில் வெற்றிபெறும் வரை சபாநாயகர் மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இப்படி ஒரு சிக்கலில்தான் அதிமுக தற்போது மாட்டி இருக்கிறது.
மெஜாரிட்டி இல்லை
தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தலில் அதிமுக மெஜாரிட்டி பெறக்கூடிய அளவிற்கு எம்எல்ஏக்களை பெறாமல் போனால் இந்த 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நினைக்கும். அப்படி நடந்தால் திமுக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும். இதனால் தகுதி நீக்கம் தடைபட்டு, மெஜாரிட்டி இல்லாததால் சபாநாயகரே மாற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் இந்த அதிரடி திட்டத்தை அதிமுக எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளது.