சபாநாயகர் பதவியை இவருக்குக் கொடுத்திரலாமா.. திமுகவில் இப்பவே ரெடியாகுறாங்களாம்!
சென்னை: தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மூலம் எப்படியும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது திமுக முகாம். இதனால் அறிவாலய வட்டாரம் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்நிலையில் ஆட்சி அமைத்தால் திமுகவில் யார் யாருக்கு என்ன பதவி என்பன உள்ளிட்டவைகள் குறித்தும் இப்போதே அங்கு விவாதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக தோல்வி என்றால் என்னவென்றே தெரியாமல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருபவருமான சக்கரபாணி சபாநாயகர் ஆகக்கூடும் எனக் கூறப்படுகிறது.
சட்டமன்ற செயல்பாடுகளில் அனுபவம் நிறைந்தவர் என்றும், கடந்த திமுக ஆட்சியில் அரசு கொறடாவாகவும் செயல்பட்டவர் சக்கரபாணி. மேலும் திண்டுக்கல் மாவட்ட அரசியலில் ஐ.பெரியசாமிக்கு நிகராக ஸ்டாலினின் குட் புக்கில் உள்ளவர் சக்கரபாணி. இப்படி தலைமையின் நன்மதிப்பை சம்பாதித்து வைத்துள்ளதால் சக்கரபாணிக்கு இம்முறை ஸ்டாலின் உரிய கவுரவம் அளிப்பார் எனக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதனிடையே சக்கரபாணி நல்லவர் தான், ஆனால் அதிர்ந்து கூட பேசமாட்டார், இவர் எப்படி அதிமுகவினரை சமாளிப்பார்..அதனால் துரைமுருகன் தான் அடுத்த சபாநாயகர் என்கின்றனர் துரைமுருகன் ஆர்மிகள். மேலும், அவரால் மட்டும் தான் அவையில் சிரிப்பையூட்டி கலகல என வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.
முதல்ல தேர்தல் முடியட்டும்ப்பா. பிறகு ஆள் எடுக்கலாம்... இப்படித்தான் தேனி பக்கம் இப்பவே ஓ ரவீந்திரநாத் குமாரை எம்பியாக்கி விட்டார்கள் ஒரு கோவிலில்.. என்று சிலர் முனுமுனுக்கின்றனர்.