ஒரே சின்னம்தான்.. கூட்டணி கட்சிகளுக்கு ஆர்டர் போடும் ஸ்டாலின்.. மதிமுக, விசிக, இடதுசாரிகள் அதிர்ச்சி
2021 சட்டசபை தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வருகிறது.
திமுக கட்சி கடந்த சில வாரங்களாக அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கூட்டணி இல்லாமல் தனியாக 2021 சட்டசபை தேர்தலை சந்திக்கலாமா என்று திமுக ஆலோசனை செய்தது. தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனையின் படி திமுக தனியாக நிற்க ஆலோசனை செய்தது.
ஆனால் திமுக கடைசியில் இந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. அதிமுகவின் வலிமை காரணமாக தனியாக தேர்தலை சந்திக்கும் திட்டத்தை திமுக கைவிட்டது.
ஆனால் என்ன
ஆனாலும் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்க உள்ளது என்கிறார்கள். தமிழகத்தில் திமுகவில் காங்கிரஸ், மதிமுக, 2 இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக், கொங்கு முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த கட்சிகளுக்கு திமுக முக்கியமான கண்டிஷன் ஒன்றை வரும் 2021 சட்டசபை தேர்தலில் போட உள்ளது.
என்ன கண்டிஷன்
அதன்படி காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் 2021 தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கூற முடிவெடுத்துள்ளது. காங்கிரஸ் தேசிய கட்சி, அதன் கை சின்னம் பிரபலம் ஆனது. மதிமுக, விசிக இரண்டும் புதிய சின்னத்தில்தான் சட்டசபை தேர்தலை சந்திக்கும். இதனால் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக முடிவெடுத்துள்ளது.
வெற்றி வாய்ப்பு
இதற்கு இரண்டு காரணம் உள்ளது. முதல் காரணம் வாக்கு வங்கி. திமுகவின் உதய சூரியன் சின்னம் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் மதிமுக, விசிக வாங்கும் புதிய சின்னங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது கஷ்டம். இது தேர்தல் நேரத்தில் பெரிய ரிஸ்க்காக இருக்கும். திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக் குறியாக்கும். லோக்சபா தேர்தலில் கூட இதே நிலை விசிக கட்சிக்கு வந்தது.
விசிக எப்படி
அப்போது புதிய சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் மிகவும் கஷ்டப்பட்டுதான் தேர்தலில் வெற்றிபெற்றார். அதே நிலைமை மீண்டும் வர கூடாது என்று திமுக நினைக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகள் அனைத்தையும் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட வைக்கலாம் என்று திமுக திட்டமிட்டுள்ளது. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. 2021 தேர்தலில் திமுக வெற்றிபெற்றாலும் பெரிய அளவில் மெஜாரிட்டி பெறாது என்கிறார்கள்.
மெஜாரிட்டி எப்படி
மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட 6-7 இடங்களை திமுக அதிகமாக பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இதேபோல் ஆட்சி அமைத்த காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளது. எம்எல்ஏக்கள் எளிதாக கட்சி தாவும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் பாஜகவிடம் தாவும் நிலை உள்ளது. இதை தடுக்க ஒரே சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்.
அணி மாற முடியாது
அதன்படி திமுக சின்னத்தில் போட்டியிட்டால் மதிமுக, விசிக , இடதுசாரி எம்எல்ஏக்கள் அணி மாற முடியாது. தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க முடியும். ஆகவே இந்த ஆப்ஷனை பயன்படுத்த திமுக தீவிரமாக முயன்று வருகிறது. திமுகவில் இருக்கும் சில மூத்த உறுப்பினர்கள் இந்த ஐடியாவை கொடுத்ததாக கூறுகிறார்கள். விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை நடக்க போகிறது.
ஆனால் முடியாது
ஆனால் கூட்டணி கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ளாது என்கிறார்கள். முக்கியமாக மதிமுக இதை ஏற்றுக்கொள்ளாது. மதிமுக என்னதான் இருந்தாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. விசிகவிலும் சில உறுப்பினர்கள் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் திமுகவில் விரைவில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என்கிறார்கள்.