வைகோவுக்கு ஒன்னு போக.. திமுகவுக்கு 2 சீட்.. அப்ப காங்கிரஸுக்கு.. புது தகவல்கள்!
Recommended Video
சென்னை: திமுகவுக்கான மூன்று ராஜயசபா சீட்டுகளில் ஒன்று வைகோவுக்கு போக மீதமுள்ள இரண்டு சீட்டுகள் யார், யாருக்கென்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அனுப்பப்பட வேண்டிய 6 இடங்கள் காலியாகிறது. இதில் 3 இடங்களை திமுகவும் 3 இடங்களை ஆளும் அதிமுகவும் நிரப்ப முடியும். மொத்தமுள்ள இந்த 6 இடங்களுக்கும் இரு கட்சிகளிலும் பலத்த முட்டல், மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இது ஒருபக்கம் என்றால் இருகட்சிகளோடு கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சிகளும் தங்களுக்கு ஒரு இடம் வேண்டும் என்று இரு கட்சிகளையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுகவில் உள்ள 3 இடங்களில் ஒரு இடம் வைகோவுக்கு என்று தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது ஆகவே மீதமுள்ள இரு இடங்கள் யாருக்கு ஒதுக்கப்படும் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரு இடங்களில் ஒரு இடத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டு வருகிறது. அதாவது மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. தற்போது அவரை உடனடியாக மாநிலங்களவை உறுப்பினர் ஆக தேர்வு செய்ய காங்கிரசுக்கு எந்த மாநிலத்திலும் வாய்ப்பில்லை. ஆகவே அவரை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த இரு இடங்களை யாருக்கு வழங்குவது என்று ஸ்டாலின் தனிக்கணக்கு ஒன்று போட்டுள்ளதாக தெரிகிறது. திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்காக பம்பரமாக பணியாற்றியுள்ளார். இதை கவனித்த ஸ்டாலின் அப்போதே சண்முகத்திற்கு சீட் வழங்க முடிவு செய்துள்ளார். இது குறித்து அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியிடம் ஸ்டாலின் வலியுறுத்தியபோது அந்த சீட் ஏற்கனவே டி.கே.எஸ் இளங்கோவனுக்கு என்று முடிவு செய்துவிட்டதால் அப்போது ஸ்டாலினால் சண்முகத்திற்கு சீட் வாங்கி தர முடியவில்லை.
ஆகவே இருக்கும் இரண்டு இடத்தில் ஒரு இடத்தை சண்முகத்திற்கு வழங்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் தலைமைக் கழக சட்ட ஆலோசகரான என்.ஆர். இளங்கோவுக்கு இன்னொரு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பை வழங்கலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்திருந்த நிலையில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் தரப்பில் இருந்து ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் பீட்டர் அல்போன்ஸை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் இதை மறுத்துள்ளார்.
இந்த இடம் திமுகவினருக்கே ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கலைஞர் நினைவிட வழக்கில் நீதிமன்றத்துல திறமையாக வாதாடி, வென்ற வழக்கறிஞர் வில்சனுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஸ்டாலினிடம் வைக்கப்பட்டுள்ளது. இதை கேட்ட ஸ்டாலின் வில்சனுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதன் மூலம் கிறிஸ்தவ பாதிரியார்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றினது போலவும் இருக்கும் அதே வேளையில் திமுகவை சேர்ந்தவருக்கே சீட் வழங்கியது போலவும் இருக்கும் என்று கருதுகிறாராம் .
ஆகவே திமுகவின் மூன்று ராஜ்யசபா சீட்டுகளில் ஒன்று வைகோவுக்கும், இரண்டாவது சீட் ஸ்டாலினின் தேர்வான தொ.மு.ச வை சேர்ந்த சண்முகத்திற்கும் மூன்றாவது சீட் வழக்கறிஞர் வில்சனுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.