திமுகவில் எடப்பாடியாரா.. இது எப்போ? ஆன்லைன் மூலம் ஆள் பிடிக்க போய்.. தொடரும் "டெக்னிக்" பரிதாபங்கள்
திமுகவில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை குளறுபடி நடந்து வருகிறது
சென்னை: திமுகவில் எடப்பாடியாரா? என்னது டிரம்ப்பா.. இது எப்போ நடந்தது? என்ற கேலி - கிண்டல்கள் இன்னமும் சோஷியல் மீடியாவில் குறையாமல் உள்ளது.. திமுக உறுப்பினர்களுக்கான ஆன்லைன் சேர்க்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரில் உறுப்பினர் அட்டை பெறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக சார்பில்"எல்லோரும் நம்முடன்" என்ற பெயரில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது... ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில், செல்போன் நம்பரை தந்து ஓடிபி மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக்க முடியும்.
அதன்படி உறுப்பினர்களும் சேர்ந்தார்கள்.. முதல் 3 நாட்களிலேயே ஒரு லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்ததாக திமுக அறிக்கவும் செய்தது.. மாற்றத்தை நோக்கி திமுக நடைபோடுவதாகவும், உறுப்பினராவது எளிமைப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்க தக்க அம்சம் என்றும் பல தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது.
டிரம்ப்
அதேசமயம், முதல் நாளிலேயே சர்ச்சையும் வெடித்தது.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திமுகவில் சேர்ந்ததாக அவருடைய உறுப்பினர் அட்டை வெளியானது.. அதில் அவர் எழும்பூர் தொகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வெறும் செல்போன் நம்பர் மூலம் எந்தவித ஆவணமுமின்றி உறுப்பினர் அட்டை வழங்குவது தவறு என்ற கருத்துக்கள் எழ ஆரம்பித்துள்ளன.
திமுக
இந்த பரபரப்பு நடந்த போதுதான், முக அழகிரிக்கும் திமுகவில் சேர்ந்ததாக உறுப்பினர் அட்டை பெற்ற தகவல் வெளியானது.. கட்சியில் இல்லாதவர் எப்படி இணைந்தார் என்ற குழப்பம் நிலவியாபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவில் இணைந்ததாகவும், அவருக்கும் உறுப்பினர் அட்டை என்ற தகவல் வெளியானது..
மாற்று கட்சி
அதுமட்டுமல்ல, இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் உயிரோடு இல்லாதவர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள், மாற்று கட்சிகளில் உள்ளோர்கள் என பெயர்கள் என குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது... இதனால் திமுகவை பலர் கிண்டல் அடித்தும், விமர்சித்தும் வருகிறார்கள்.. எப்படி இருந்த கட்சி, இன்று ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கும் அளவுக்கு வந்துவிட்டதே என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள். இதனிடையே, இந்த கோளாறை சரிசெய்ய திமுக தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
உறுப்பினர்கள்
ஆனால், விமர்சனங்கள் இன்னமும் அடங்கவில்லை.. "தமிழகத்தின் பெரிய கட்சி திமுக.. அது இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கும் செயலில் ஈடுபடலாமா? திமுகவுக்கு மாவட்ட, நகர, ஒன்றிய கழகங்கள் இல்லையா? இதுவரை உறுப்பினர்களை சேர்த்தது எப்படி? இனிமேல் கட்சியை இணைய வழியிலேயேதான் நடத்த போகிறார்களா?
பிரசாந்த் கிஷோர்
இப்படித்தான் பாஜக மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்தது.. ஆனால் 70 வருஷமாக வேரூன்றிய திமுக செய்யலாமா? இது கட்சியின் பலவீனத்தையே வெளிக்காட்டுகிறதே? மாவட்ட அமைப்புகளின் மீது தலைமைக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதா?.. பிரசாந்த் கிஷோர் உள்ளே வந்தபிறகுதான் இதெல்லாம் நடக்கிறது.. இப்படி ஆலோசனைகளை தந்தால், திமுக மேலும் பலவீனமாகத்தான் ஆகும்" என்று முணுமுணுப்புகள் எழுந்தபடியே உள்ளன.