கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்... முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.எல்.ஏ.
சென்னை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. மருத்துவர் சரவணன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான அரசு ஆலோசனை கூட்டங்களில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாராமல் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் பங்கேற்க வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மருத்துவர் சரவணன் எழுதியுள்ள கடிதத்தில்,
கொரோனா தொற்று மூன்றாம் நிலையை நோக்கி செல்வதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மக்களிடத்தில் கொரோனாவை பற்றி நேரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை அரசு ஆலோசனை கூட்டங்களிலும், சுகாதார ஆய்வு பணிகளிலும், விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பங்கேற்க செய்ய வேண்டும்.
எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மிகவும் எளிதாக மக்களிடத்தில் சென்று சேரும் என கருதுகிறேன். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாராமல் என்னை போன்ற அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் கொரோனா தடுப்பு பணிகளில் பங்கேற்க செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்டவாறு சரவணன் தனது கடிதத்தில் குறிப்பிட்டு அதனை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி கொரோனா நோய் தடுப்பு பணிகளில் முழுக்க முழுக்க அரசு இயந்திரம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் கீழ் அரசு அதிகாரிகள் மட்டுமே இந்தப் பணிகளை கவனித்து வரும் சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களையும் இந்த பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. சரவணன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்தக் கடிதம் தொடர்பாக சரவணன் எம்.எல்.ஏ.விடம் பேசிய போது, ஊரடங்கு தொடர்பாகவும், ''கொரோனாவின் தாக்கம் பற்றியும் கிராமப்புற மக்களுக்கு இன்னும் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இதனால் தான் பெருமளவில் அவர்கள் வெளியே சுற்றக் கூடிய நிலையை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில் போலீஸ் போய் கூறினால் எல்லாம் வேலைக்கு ஆகாது, எங்களை போன்ற எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால், ஊருக்கு எம்.எல்.ஏ. வந்தாரு, அவர் கூட இதைப் பற்றி சொன்னாரு என ஒரு விழிப்புணர்வு ஏற்படும். இதற்காக தான் இக்கடிதத்தை எழுதினேன்''.
மேலும், ''தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒரு சிலர் மட்டும் தங்கள் தொகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால் என்னைப் போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சென்றால் அனுமதியில்லை என காவல்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் இதில் பாரபட்சமின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய பொறுப்பை உணர்ந்து அவர்களுக்கும் அரசு உரிய அனுமதி தர வேண்டும்'' என்றார்.