கொரோனாவுக்கு பலியான முதல் தமிழக எம்எல்ஏ ஜெ. அன்பழகன்- சென்னையில் உடல் நல்லடக்கம்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். ஜெ. அன்பழகனின் உடல் சென்னை கண்ணம்மாபேட்டையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனுக்கு காய்ச்சல், இருமல் இருந்து வந்தது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக ரேலா மருத்துவமனையில் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வந்தார்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்... பிறந்தநாளன்று உயிர்பிரிந்தது
இந்த நிலையில் இன்று காலை முதல் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்தது. இதனையடுத்து ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் விசாரித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஜெ. அன்பழகனின் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ. அன்பழகன்
சென்னையில் திமுகவை வளர்த்த மூத்த முன்னோடிகளில் ஒருவரான தியாகராயர் பழக்கடை ஜெயராமனின் மகன் ஜெ. அன்பழகன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர்.
2001, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன். 2001-ல் தி.நகர் தொகுதியிலும் 2006, 2011-ல் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
திமுகவின் தென் சென்னை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தார் ஜெ. அன்பழகன். திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் ஜெ. அன்பழகன் விளங்கினார்
சென்னையில் நல்லடக்கம்
கொரோனாவால் உயிரிழந்த எம்.எல்.ஏ. அன்பழகனின் உடல் சென்னை கண்ணம்மாபேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கண்ணம்மாபேட்டையில் ஜெ. அன்பழகனின் பெற்றோர் கல்லறை அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது திமுகவினர் அன்பழகனுக்கு வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.