J Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருள்களை ஜெ.அன்பழகன் வழங்கி வந்தார். கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாக இருந்தபோதிலும், நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, மக்களோடு மக்களாக பழகி வந்தார்.
"அபோகலைப்டிக்.." கோழி பண்ணையால் உருவாகும் வைரஸ்..! உலகின் பாதி மக்கள் காலி.. பிரபல விஞ்ஞானி வார்னிங்
சென்னை நிலவரம்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 என்ற அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிலும், 1012 பேருடன் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது சென்னை மாவட்டம். சென்னையை பொறுத்த அளவில் பரிசோதனை செய்யப்படுவோரில் ஐந்தில் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது புள்ளி விவரங்களின் மூலம் உறுதியாக தெரிகிறது.
நேற்று இரவு
இந்த நிலையில், ஜூன் 3ம் தேதியான இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் என்பதால், திமுக சார்பில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால், திடீரென நேற்று, அதாவது, ஜூன் 2ம் தேதி, நள்ளிரவில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை மருத்துவமனை
இதையடுத்து திமுக மூத்த நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். "மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவது நல்லது என்று தோன்றுகிறது.." என்று அந்த நிர்வாகியிடம் அன்பழகன் கூறியுள்ளார். எனவே அவரது ஏற்பாட்டின் பேரில், சென்னை, குரோம்பேட்டையிலுள்ள, ஒரு தனியார் மருத்துவமவனையில் அன்பழகன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மூச்சுத் திணறல்
அன்பழகனுக்கு, மூச்சுத் திணறல் இருப்பதால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளித்து வருகிறார்கள் மருத்துவர்கள். அவருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து சந்தேகித்த மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவரது குடும்ப உறுப்பினர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா உறுதி
அன்பழகனுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக வேறு சில உடல் உபாதைகளும் இருந்துள்ளன. எனவே, கொரோனா தொற்று காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறி ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவர்கள் அவரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அன்பழகனுக்கு எப்படி தொற்று பரவியது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட தமிழகத்தின் முதல் எம்எல்ஏ இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.