சேச்சே.. நான் பாஜகவில் இணையலைங்க.. கோரிக்கை வைக்க வந்தேன்.. கு. க. செல்வம் குபீர் பல்டி!
சென்னை: டெல்லியில் தேசிய பாஜக தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் அந்தக் கட்சியில் திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் இணைய இருக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில், பாஜகவில் இணையவில்லை என்று குக செல்வம் தெரிவித்துள்ளார். திமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் சமீபத்தில் சிற்றரசு நியமனம் செய்யப்பட்டார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக வேண்டும் என்று செல்வம் முயற்சித்துள்ளார். பொறுப்பு கிடைக்காத காரணத்தினால் விரக்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் பாஜகவில் இணைய முடிவு எடுத்துள்ளார் என்ற செய்தி வெளியானது.
இந்த நிலையில் டெல்லிக்கு தமிழக பாஜக கட்சித் தலைவர் எல்.முருகனுடன் செல்வம் சென்றார். தேசிய பாஜக தலைவர் ஜெபி நட்டா வீட்டுக்கு சென்று இருந்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இணையவில்லை.
ஜெபி நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குக செல்வம், ''நாளை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. பிரதமர் மோடியை இதற்காக பாராட்டுகிறேன். நன்றி தெரிவிக்கிறேன். அயோத்திக்கு இணையாக ராமேஸ்வரத்திலும் கோயில்களை மேம்படுத்த வேண்டும், கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார் .
பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படும் செல்வம் 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தார். கட்சியிலும் உரிய அங்கீகாரம் கிடைத்தது. கட்சியில் செல்வாக்கு பெற்றவராக வலம் வந்தார். தற்போது சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் பாஜகவுக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது.
கு.க.செல்வத்தின் கட்சி தாவல் நாடகம்- திமுக தலைமைக்கு மறைமுக வார்னிங்.. .எப்படி சமாளிக்கும்!
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளுக்குள் புயல் வீசி வருகிறது. கட்சிகளின் முக்கியப் புள்ளிகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் கட்சிகள் இருக்கின்றன. விபி துரைசாமி திமுகவில் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். பேட்டி அளித்து இருந்தார். இதன் பின்னர் இவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்ற செய்தி வெளியானது. பாஜகவில் விபி துரைசாமி இணைந்தார். கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆனால், கு.க. செல்வம் டெல்லி சென்றது ரகசியம் காக்கப்பட்டது.
வரும் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியானதாகவும், இதனால் தனக்கு வாய்ப்பு இல்லை என்று குக செல்வம் உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தொகுதி முன்பு முக ஸ்டாலின் தொகுதியாக இருந்தது. எப்படி பார்த்தாலும், கட்சியில் உதயநிதியின் கை ஓங்கி வருவதால் சல சலப்பு ஏற்பட்டுள்ளது என்றே தெரிகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கட்சிக் கூட்டத்தில் குக செல்வம் பங்கேற்கவில்லை. அப்போதே கட்சி தலைமைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பாஜக தமிழக துணைத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைய இருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருந்தது. அதுவும் நடக்கவில்லை. குக செல்வம் பாஜகவில் இணைகிறார் என்ற செய்தியும் புஷ் என்றாகிவிட்டது.