திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனுக்கு நிபந்தனை முன் ஜாமின்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Recommended Video
சென்னை: கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் நிலத்தை மோசடி செய்து மனைவி பெயருக்கு மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியனுக்கும், அவரது மனைவிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன். இவர் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் கிண்டி, தொழிலாளர் காலனியில் தன் மனைவி காஞ்சனாவுக்கு சொத்து உள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் மா.சுப்பிரமணியன் சொல்வது பொய் என்றும் அவர் ஏமாற்றி நிலத்தை அபகரித்துள்ளதாகவும் கிண்டி காவல்துறையில் சைதை பார்த்திபன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வன் வந்தாலும் சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்.. தர்மசங்கடத்தில் எடப்பாடி!
போலி ஆவணங்கள்
இது தொடர்பாக சைதை பார்த்திபன் அளித்துள்ள புகாரில், எஸ்.கே.கண்ணன் என்பவர் இறந்த பிறகு அவரது நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மா.சுப்பிரமணியன் அபகரித்துள்ளதாக கூறியிருந்தார். மேலும் அபகரித்த நிலத்தை மனைவியின் பெயருக்கு மா.சுப்ரமணியன் மாற்றியதாகவும், இந்த மோசடிக்கு சிட்கோ அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
உயர்நீதிமன்றத்தில் மனு
இந்த புகாரை ஏற்று மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது கிண்டி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் தங்கள கைது செய்யக்கூடாது என முன் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மா.சுப்பிரமணியன் மறுப்பு
அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், அதிகார துஷ்பிரயோகம் மூலம் நில அபகரிப்பு செய்துள்ளதால் மா.சுப்பிரமணியன், காஞ்சனாவிற்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார். ஆனால் மா.சுப்பிரமணியன் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், எஸ்.கே.கண்ணன் உயிருடன் இருந்தபோதே நிலத்தை மனுதாரர் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டப்பூர்வமாக மாற்றியதாக தெரிவித்தார்.
சுப்ரமணியத்துக்கு ஜாமின்
இருதரப்பு வாதங்களுக்கு பின்னர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக் கூடாது எனவும் நீதிபதி இளந்திரையன் அறிவுறுத்தினார்.