மு.க.ஸ்டாலின் தலைமையில்.. திமுக எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் ஆலோசனை
சென்னை: திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள பின்னணியில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூருக்கு வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இடைத்தேர்தலை ஒத்தி போட பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்தலை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினார். இந்த நிலையில் இன்றைய திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழலில் திமுக தனது எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று மாலை கூட்டியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.