மோடிக்கு புகழாரம்.. ராகுல் காந்திக்கு குட்டு.. திமுகவில் இருந்தபடியே தலைமையை சீண்டும் கு.க.செல்வம்
சேச்சே.. நான் பாஜகவில் இணையலைங்க.. கோரிக்கை வைக்க வந்தேன்.. கு. க. செல்வம் குபீர் பல்டி!சென்னை: தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும், திமுக உட்கட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை டெல்லியில் இருந்தபடி வைத்துள்ளார் திமுக எம்எல்ஏ செல்வம்.
ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவான செல்வம் பாஜகவில் இணைய போவதாக இன்று காலை முதல் தீவிரமான தகவல்கள் வெளியாகி வந்தன. அவ்வாறு அவர் இணைந்தால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமே என்ற பேச்சுகள் நடந்தன.
இந்த நிலையில்தான் டெல்லியில், மாலை, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் செல்வம். அப்போது தமிழக பாஜக தலைவர் முருகன், முரளிதர ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.
சேச்சே.. நான் பாஜகவில் இணையலைங்க.. கோரிக்கை வைக்க வந்தேன்.. கு. க. செல்வம் குபீர் பல்டி!
பாஜகவில் இணையவில்லை
இதன் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார், செல்வம். தான் பாஜகவில் இணையவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறிய பேட்டியை பாருங்கள்: நாளை நடைபெற உள்ள ராம ஜென்மபூமி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோரிக்கைவிடுக்க வந்தாராம்
நான் சட்டசபை உறுப்பினராக உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட் வேண்டும் என்று கேட்டதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க டெல்லி வந்தேன். அப்போது ஜேபி நட்டாவை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே அவரை சந்தித்து விட்டு வந்துள்ளேன்.
தமிழ்க்கடவுள் முருகன்
ராமேஸ்வரம் கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் அயோத்திக்கு இணையாக மேம்படுத்த எனது கோரிக்கையை முன்வைத்துள்ளேன். தமிழ்க்கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்கவேண்டும். திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்று ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் நல்ல ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தியையும், அவர் சார்ந்த கட்சி உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செல்வம் தெரிவித்தார்.
உள்ளே இருந்தபடி
ஒரு பக்கம் பாஜகவில் இணையவில்லை என்று தெரிவித்தாலும், திமுகவின் கொள்கைகளுக்கு நேரெதிராக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை புகழ்ந்துள்ளார் செல்வம். மேலும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுகவிலிருந்து செல்வத்தை கட்சித் தலைமையே நீக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அவ்வாறு நீக்கும்பட்சத்தில் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை செல்வத்தை திமுக நீக்காவிட்டால், உள்ளே இருந்தபடியே அவர் தொடர்ந்து தலைமையையும், கட்சியின் கூட்டணிகளையும் விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.